This article is from Jul 19, 2021

முஸ்லீம் வியாபாரி இந்து ஆண்களுக்கு ஜூஸ் மூலம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக வதந்தி !

பரவிய செய்தி

இந்துக்களை மலட்டு ஆண்களாக மாற்றும் முஸ்லீம் அப்துல். இவர் தனது பலச்சாறு கடையில் இந்துக்களுக்கு மட்டும் அமிலத்தன்மை வாய்ந்த ஆன்மையை குறைக்கும் மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார் . இவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் இவர் போன்ற உணவு பலச்சாறு போன்ற உணவு பொருட்களில் மாத்திரை கலந்து இந்துக்களை மலட்டு தன்மை ஏற்படுத்தவும் இதன் மூலம் இந்துக்களின் வம்சம் விருத்தியாவதை தடுக்கவும் இந்தியா எங்கும் பழச்சாறு உணவு கடைகள் போன்றவற்றில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று கேராளாவில் முஸ்லீம் கடைகளில் விற்படும் பிரியாணியில் மலட்டுதன்மையை ஏற்படுத்தும் மாத்திரை கலப்பதையும் ஒரு வீட்டின் அறை முழுவதும் மாத்திரைகளை காவல்துறை கைப்பற்றியதையும் கேரளா சேனல்கள் ஒளிப்பி அதிர்ச்சி தந்தன . எனவே இந்து சகோதர சகோதரிகளே நீங்களோ உங்கள் குழந்தைகளோ குடும்பத்தினரோ வெளியில் சென்றால் முஸ்லீம் கடைகளில் பழச்சாறு பிரியாணி சாப்பாடு புரோட்டா சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் . உங்கள் வம்சம் தழைக்க இதை அவசியம் செய்யுங்கள்

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

முஸ்லீம் வியாபாரி ஒருவர் தன்னுடைய ஜூஸ் கடையில் இந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த ஜூஸில் மாத்திரைகளை கலந்து கொடுப்பதாக நீண்ட ஒரு நிலைத்தகவல் உடன் தள்ளுவண்டியில் சாத்துக்குடி போன்ற ஜூஸ் விற்பனை செய்யும் நபரை சுற்றி வளைத்த சிலர் அவரின் வண்டியின் உள்ளே வைக்கப்பட்ட வாளியில் மஞ்சள் நிற தண்ணீரையும், பாத்திரத்தில் சர்பத் போட பயன்படுத்தும் எசென்ஸ் போன்ற ஒன்றையும் காண்பித்து பேசும் 4 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் மதம் சார்ந்து வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் ” Awareness now ” எனும் லோகோ சுற்றி வருவதை பார்க்க முடிந்தது. அதை வைத்து தேடிப் பார்க்கையில், 2020 பிப்ரவரி 14-ம் தேதி Awareness now எனும் முகநூல் பக்கத்தில் ” Be careful while drinking and eating from food stalls on street ” எனும் தலைப்பில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

Video link 

ஆனால், வைரல் செய்யப்படுவது போன்று முஸ்லீம் வியாபாரி இந்துக்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக எந்தவொரு தகவலும் அதில் குறிப்பிடவில்லை. மாறாக, மொசாம்பி(சாத்துக்குடி) ஜூஸ் என்ற பெயரில் மக்கள் இதைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவை பதிவிட்ட முகநூல் பக்கம் மும்பை பகுதியை குறிப்பிட்டு இருக்கிறது.
.
இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட மஞ்சள் நிற தண்ணீர் மற்றும் எசென்ஸ் போன்றவற்றை பார்க்கையில், சாத்துக்குடி ஜூஸ் என்ற பெயரில் எசென்ஸ் கலந்து போலியான ஜூஸ் விற்பனை செய்வதை தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது. தெருவோர உணவு பொருட்களில் இருக்கும் கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
.
முஸ்லீம் கடைகளில் மாத்திரைகளை உணவில் கலந்து இந்துக்களுக்கு கொடுத்து மலட்டுத்தன்மையை உண்டாக்குவதாக வதந்தி பரப்புவது இது முதல்முறை அல்ல. இதே வைரல் செய்யப்படும் வீடியோவின் நிலைத்தகவலில், முஸ்லீம் கடை பிரியாணியில் மாத்திரைகளை கலந்து மலட்டுத்தன்மையை உண்டாக்குவதாக பரவிய தகவலை வதந்தி என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
.
.
இதற்கு முன்பாக பரவிய தகவலின் போது, பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை கொன்டு மலட்டுத்தன்மை ஏற்படுத்த முடியாது, அறுவை சிகிச்சை மூலமே நிரந்தரமாக கருத்தடைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவர் கூறிய தகவலை நினைவு கூறுகிறோம்.
 .
இதற்கெல்லாம் முன்பாக, இலங்கை முஸ்லீம் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும் வதந்தி பரவி வன்முறையை உண்டாக்கியது. இப்படி முன்பு பரவிய வதந்திகளையும் தற்போது பரவும் வீடியோ உடன் இணைத்து இருக்கிறார்கள்.
.
முடிவு :
.
நம் தேடலில், முஸ்லீம் ஒருவர் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து இந்துக்களுக்கு ஜூஸ் விற்பனை செய்து வருவதாக பரப்பப்படும் வீடியோ தவறானது, அந்த தகவல் வதந்தியே.
.
அந்த வீடியோவில் எசென்ஸ் போன்றவை கலந்து போலியான முறையில் ஜூஸ் விற்கும் போது பிடிபட்டுள்ளார். இதற்கு முன்பாகவும், முஸ்லீம் உணவு கடைகளில் இந்துக்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்வதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader