சிறுமி ஆசிபா வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை என வதந்தி !
பரவிய செய்தி
ஆசிபாவை பலியாக்கிய மிருகங்கள் சாட்சியம் போதாதென்று விடுதலை.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஆண்டில் காஷ்மீரின் கதுவா பகுதியில் சிறுமி ஆசிபாவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சம்பவம் தொடர்பாக நாடு முழுவதிலும் கண்டங்கள் எழுந்தன. சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டியும் நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் படிக்க :சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்…
ஆனால், தற்போது வரை ஆசிபா வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை எப்பொழுது அளிக்கப்படும் என்பது கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில், ஆசிபா வழக்கில் கைதானவர்களின் மீது தகுந்த சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆசிபா வழக்கில் அப்படியொரு தீர்ப்பு வந்ததா என அறிய இணையத்தில் இருக்கும் அனைத்து செய்தி தளங்களிலும் தேடிப்பார்க்கையில் சிறுமி ஆசிபா வழக்கு தொடர்பான தற்போதைய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. நீதிமன்றத்தில் இருந்து அப்படி எந்தவொரு தீர்ப்பும் வெளியாகவில்லை.
காஷ்மீரில் மே 14-ம் தேதி SKIMS எனும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே அமைதியான முறையில் பந்திப்பூரா பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு எதிராக போராடினர். அங்கு பாலியல் வன்புணர்வுக்கு எதிராக விரைவான சட்டப்பூர்வமான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
மாணவர்கள் அனைத்து பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு எதிராக விரைவான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும், சிறுமி ஆசிபா வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என ” JusticeForAsifa ” என்ற கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : குற்றவாளிக்கு ஆதரவான பேரணிக்கு அமைச்சர்களை அனுப்பிய பாஜக தலைமை ?
இதைத் தவிர சிறுமி ஆசிபா சம்பவமாக சமீபத்திய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. சிறுமி ஆசிபா வழக்கில் தவறான செய்திகளை பரப்பி அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அரசியல் லாபம் பார்க்க முயல்கின்றனர்.