This article is from Jan 29, 2021

மருத்துவர் கஃபீல் கான் டெல்லி டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டாரா ?

பரவிய செய்தி

26.1.21 தில்லி வந்த டிராக்டர் பேரணியில் 50 இந்து குழந்தைகளைக் கொன்று விட்டு ஜாமீனில் இருக்கும் கொடூர குற்றவாளி Dr.கஃபீல் கான்.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டதாக தலைப்பாகை உடன் கஃபீல் கான் டிராக்டரில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

Facebook link | Archive link

ஜாமீனில் வெளியே வந்த கஃபீல் கான் டெல்லி டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டாரா, வைரலாகும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

2021 ஜனவரி 26-ம் தேதி கஃபீல் கான் தன் யூடியூப் சேனலில் பதிவிட்ட வீடியோவில் இருந்தே இப்புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், டிராக்டரின் அடிப்படை வழிமுறை குறித்த பயிற்சிகளை பேசி இருக்கிறார். வீடியோவின் பின்னணியில் கிராமத்தில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது மற்றும் வேறு எந்த டிராக்டர்களும் தென்படவில்லை.

Twitter link | Archive link 

” டிராக்டர் பேரணிக்கு ஒரு நாளுக்கு முன்பாக ஜனவரி 25-ம் தேதி அந்த வீடியோ ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள லங்கரேயவாஸில் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 26-ம் தேதி ஜெய்ப்பூர் ஜோத்வாராவில் உள்ள ஷாஹீன் கல்வி நிறுவனத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியதாகவும், கடந்த ஒரு மாதமாக டெல்லிக்கு செல்லவில்லை, ஜெய்ப்பூரில் உள்ளதாக ” கஃபீல் கான் இந்தியா டுடேவிற்கு பதில் அளித்து உள்ளார்.

Twitter link | Archive link

ஜனவரி 26-ம் தேதி மருத்துவர் கஃபீல் கான் தேசியக் கொடியை ஏற்றிய போது எடுக்கப்பட்ட இரு வீடியோக்களை அவரின் மனைவி மருத்துவர் சபிஷ்தா கான் மற்றும் சகோதரர் ஆதில் கான் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். அதை கஃபீல் கான் ரீட்வீட் செய்து இருக்கிறார்.

Twitter link | Archive link

வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது நீங்களா என ட்விட்டர்வாசி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ” ஆம். ஆனால் டெல்லி இல்லை, ராஜஸ்தான் கிராமம் ” என கஃபீல் கான் தனது யூடியூப் சேனல் வீடியோ உடன் பதில் அளித்து உள்ளார்.

Facebook link | Archive link 

வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் உடை, தலைப்பாகை உடன் மருத்துவர் கஃபீல் கான் ராஜஸ்தான் கிராமத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜனவரி 25-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

2017-ல் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்த போது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல குழந்தைகளை காப்பாற்றியதாக கூறப்படும் கஃபீல் கான் குற்றமற்றவர் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் 9 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையடுத்து, குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பேசியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

முடிவு :

நம் தேடலில், உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அவர் டெல்லி பேரணிக்கு செல்லவில்லை. ஜனவரி 25-ம் தேதி ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader