கமல்ஹாசன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் எனப் பொய் பரப்பும் சாட்டை துரைமுருகன் !
பரவிய செய்தி
உலகநாயகன் என்று எல்லோரும் கொண்டாடினாலும் அவர் பரமக்குடிகாரர் என்று சொல்லப்பட்டாலும் அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் தான். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் கமல்ஹாசன். ஹாசன் என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு ஊர். அந்த ஊர் பெயரைத் தான் கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், சாரு ஹாசன், அனு ஹாசன் அப்டினு எல்லாரும் ஊர் பெயரை போட்டுக் கொண்டுள்ளார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் சித்தார்த் கடந்த செப்டம்பர் 28 அன்று அவர் நடித்து வெளியான ‘சித்தா‘ பட விளம்பரத்திற்காக பெங்களூரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு கன்னட அமைப்பாளர்களால் நிகழ்ச்சி முடியும் முன்பே அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை முருகன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “உலகநாயகன் என்று எல்லோரும் கொண்டாடினாலும் அவர் பரமக்குடி காரர் என்று சொல்லப்பட்டாலும் அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் தான். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் கமல்ஹாசன். இப்போ இங்கே திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ என்று ஊர் பெயரை அடைமொழியாக போட்டுக் கொள்வது மாதிரி, அதாவது கோட்டையூரார், திருச்சியூரார், அல்லூரார், அரியலூரார் என்று போடுகிறார்கள் அல்லவா, அதுபோல ஹாசன் என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு ஊர்.
அந்த ஊர் பெயரைத் தான் கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், சாரு ஹாசன், அனு ஹாசன் அப்டினு எல்லாரும் ஊரு பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அப்போ அந்த கமல் ஹாசனை இந்த ஊரில் ஒரு உயர்ந்த நட்சத்திரமாக மாற்றி அழகு பார்ப்பது தமிழ்நாடு. அப்படி கமல் ஹாசனை போலவே ரஜினி, பிரகாஷ்ராஜ், அதர்வா, கிஷோர், லக்ஷ்மி ராய் எத்தனை கன்னட நடிகர்களை வாழவைத்து, அவர்களை நடிக்க வைத்து அழகு பார்த்து, அவர்களுக்கு கோடிகோடியாக கொட்டி கொடுப்பது தமிழ்நாடு.” என்று அதில் பேசியுள்ளதை காண முடிந்தது.
உண்மை என்ன?
சாட்டைமுருகன் கூறிய தகவல்கள் உண்மை தானா? என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில். தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பதையும், கமல்ஹாசனின் உண்மையான பெயர் முதலில் ‘பார்த்தசாரதி‘ என்பதையும் அறிய முடிந்தது.
இது குறித்து scroll.in ஊடகம் “கட்டுரையாளர்கள் தவறாக பரப்பிவருகின்றனர். கமல்ஹாசன் முஸ்லிமாக பிறக்கவில்லை – அவரது அசல் பெயர் பார்த்தசாரதி.” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “கமல் நாத்திகர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர், ஆனால் அவர் முதலில் ஒரு முஸ்லீம் அல்ல. இவர் 1952 ஆம் ஆண்டு தென் தமிழ்நாட்டின் பரமக்குடியில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆரம்பத்தில் சென்னையில் உள்ள பல்லவர் கால கோவிலின் பார்த்தசாரதி தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் தந்தை டி சீனிவாசன், பின்னர் கமல்ஹாசன் என்று அவருடைய பெயரை மாற்றினார். ஸ்ரீனிவாசன் சுதந்திரப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது நண்பரான யாக்கோப் ஹாசனைக் கௌரவிக்க விரும்பினார் என்பது பல ஆண்டுகளாகவே சுற்றி வந்த கதை.
ஆனால் அது தவறான தகவல் என்று சில வருடங்களுக்கு முன்பு ஹாசன் தெளிவுப்படுத்தினார். உண்மையில் கமல்ஹாசனில் உள்ள, கமல் என்பது தாமரையையும், ஹாசன் என்பது சிரிப்பைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தையான ஹாஸ்யாவிலிருந்து உருவான பெயர் என்றும்” அந்த வீடியோவில் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் அவருடைய பெயர் சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய முடிகிறது.
இதே போன்று நடிகர் கமல் ஹாசன் கரண் தாபருக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் இது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். அதில் நெறியாளர் “உங்கள் பெயருக்கான காரணம் என்ன? இது முஸ்லீம் பெயர் மற்றும் ஹிந்து பெயர் சேர்ந்த கலவையாக உள்ளதே?” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்து பேசிய கமல் ஹாசன் “உண்மையில் இது என் தந்தையை மூலமாக வைத்து பரப்பப்படும் ஒரு கதை. நண்பரின் பெயரை வைத்ததாகப் பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு சமஸ்கிருதப் பெயர். அவர் தன்னுடைய முதல் குழந்தைகளுக்கு சாரு ஹாசன், சந்திர ஹாசன் என்று பெயர் வைத்தார். ஹாசன் என்றால் கண்ணனைப் போல சிரித்தல் என்று பொருள்படும். கமல் என்றால் தாமரை.”என்று அதில் விளக்கியுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் படிக்க: சீமான் சொன்னதைப் போல் சலங்கை ஒலி வந்த போது கமல் தந்தை உயிருடன் தான் இருந்தார்!
மேலும் படிக்க: கமல் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதி என வதந்தி !
முடிவு:
நம் தேடலில், நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என சாட்டை முருகன் பரப்பிய தகவல்கள் தவறானவை என்பதையும், கமல் ஹாசன் பெயர் சமஸ்கிருதம் மொழியிலுள்ள ஹாஸ்யா என்ற பெயரிலிருந்து வந்தது என்பதையும் அறிய முடிகிறது.