கர்நாடகா பாஜக எம்எல்ஏ காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
கர்நாடகாவில் பாஜக MLA காரில் வைத்திருந்த வாக்கு இயந்திரத்தை அடித்து நொறுக்கிய பொது மக்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நேற்றைய தினம் (மே, 10ம் தேதி) நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 72 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ள இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை (மே, 13ம் தேதி) நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டபோது, அதனை பொது மக்கள் தடுத்து நிறுத்தி அந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்றினை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
https://twitter.com/Kalaise26158891/status/1656344666936328192
உண்மை என்ன ?
பரப்பப்படும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். அச்சம்பவம் கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள மசாபினல் என்னும் கிராமத்தில் நேற்றைய தினம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிந்தது.
இந்நிகழ்வு குறித்து ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வாக்குப்பதிவு நேரத்தில் இயந்திரம் ஏதேனும் பழுதடைந்தால் அதனை மாற்றுவதற்காக, கூடுதலாக வைக்கப்பட்டிருந்த இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3 அதிகாரிகள் காரில் கொண்டு சென்றனர்.
ஆனால், வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பாகவே இயந்திரங்களை அதிகாரிகள் கொண்டு செல்வதாகப் பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து வாகனத்தினை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘அவுட் லுக்’ இணையதளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வு குறித்து கர்நாடகா மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தி அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்றைய தினம் மதியம் 12.30 மணியளவில் அதிகாரிகள் சிலர் பசவனா பாகேவாடி (Basavana Bagewadi) தொகுதியில் கூடுதலாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு மற்றும் VVPAT (voter verified paper-audit trails) இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் மாசபினலுக்கு காரில் எடுத்துச் சென்றனர். அப்போது 100-150 பேர் அந்த வாகனத்தை நிறுத்தித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவல்களை வைத்துப் பார்க்கையில் இயந்திரங்களை காரில் கொண்டு சென்றது தேர்தல் அதிகாரிகள் என்பதை அறிய முடிகிறது. அவர் பாஜக கட்சியைச் சார்ந்தவரோ, பாஜக சட்டமன்ற உறுப்பினரோ இல்லை.
மேலும் படிக்க : கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முன்னதாக கர்நாடகா தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என பிபிசி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், கர்நாடகாவில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றபோது, பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்துத் தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இயந்திரங்களைக் கொண்டு சென்ற நபர் பாஜக எம்.எல்.ஏ கிடையாது என்பதை அறிய முடிகிறது.