கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே பசு வதையை ஊக்கப்படுத்துவதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

பீட்டா இப்போது நீங்கள் எங்கே இருக்குறீர்கள்? ஜல்லிக்கட்டுக்கு தடுத்து நின்ற பீட்டா அமைப்பும் போராளிகள் இப்போ எங்க இருக்கீங்க..

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போதே, பசு வதை தடுப்பு குறித்த விவாதம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த சேத் கோவிந்த் தாஸ், பசுவதைத் தடையை அரசியலமைப்பின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அடிப்படை உரிமைகளில் சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசியலமைப்பு நிர்ணய சபை, அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கு மட்டுமானது, விலங்குகளுக்கு அல்ல, எனவே இதை “மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடு” என்னும் பகுதியின் கீழ் தான் சேர்க்க முடியும் என்று கூறி “சரத்து 48 (Article 48)“-ஐ ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பின் மற்ற பகுதிகளுடன் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

அதன்படி “அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்கள் தவிர, மற்ற இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவதை மாநிலங்கள் தடுக்க வேண்டும்” என்று கூறியது. இதன்மூலம் பசுவதை தடுப்பு சட்டத்தை பல மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு அமல் படுத்திக்கொண்டனர். அதன்படி கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் 1964-ம் ஆண்டு முதலே அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்க் கார்கே பசுவதையை ஊக்கப்படுத்துகிறார், பக்ரீத் பண்டிகையின் போது பசுவை மீட்க வருபவர்களை அடித்து உதைத்து சிறையில் தள்ளுமாறும் அவர் பேசியுள்ளார் என்று கூறி, அவர் பேசிய வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

Archive Link:

Archive Link

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில் பிரியங்க் கார்கே பேசியது தொடர்ப்பான முழு வீடியோவை Vartha Bharati என்னும் ஊடகம் கடந்த ஜூன் 21 அன்று தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.

அந்த வீடியோவில், கலபுர்கி துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த உயர் அதிகாரிகள் உடனான சந்திப்பில் காவல்துறையினருடன் பேசிய பிரியங்க் கார்கே, சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரப்புதல், வகுப்புவாத வன்முறைகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை தடுப்பதோடு வன்முறையைத் தூண்டும் பசு காவலர்களுடன் (கௌ ரக்க்ஷாக்களுடன்) வரும் நபர்களையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களிடம் இருந்து பணம் பெறுவதை மறுப்பதோடு, அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்றும் டிஜிபி சீனிவாசலுவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதே போன்று ‘News First Kannada’ என்னும் ஊடகமும் அவருடைய சந்திப்பு தொடர்பான முழு வீடியோவை “பிரியங்க் கார்கே எச்சரிக்கை: கார்கே எச்சரிக்கை! | அதிகாரிகளுடன் சந்திப்பு” என்னும் தலைப்பில் தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கால்நடைகள் குறித்த முறையான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கவும் காவல்துறையை கார்கே கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வன்முறைகளைத் தூண்டும் பசு பாதுகாப்பாளர்களை (கௌ ரக்க்ஷாக்களை) கைது செய்யவேண்டும் என அவர் பேசியிருப்பதையும் அந்த முழு வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில் காண முடிந்தது.

மேலும் இது குறித்து தேடியதில், பிரியங்க் கார்கே பசுவதை குறித்து பேசியதாக தவறாக பதிவிட்டுள்ள கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பதிவிற்கு மேற்கோள் காட்டி கடந்த ஜூன் 25 அன்று அவர் பதிலளித்துள்ளதைக் காண முடிந்தது.

Archive Link

அதில், “அன்புள்ள கர்நாடக பாஜக, உங்கள் கட்சியின் ட்விட்டர் கணக்கை கையாளும் குழுவை (agency) பணியிலிருந்து நீக்க வேண்டிய நேரம் இது. அவர்களுக்கு கன்னடம் புரியவில்லை, அரசியலமைப்பையும் புரிந்து கொள்ள மறந்துவிட்டார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஈடுபடும் வன்முறைகள் (cow vigilantism) சட்டப்பூர்வமானது என்றும், பசு பாதுகாப்பாளர்கள் (vigilantes) எந்த வகையிலும் சட்டத்தை மீறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பாஜக பரிந்துரைக்கிறதா? நண்பர்களே அவ்வாறு முயற்சி செய்து பாருங்கள், கர்நாடக அரசு உங்களுக்கு அரசியல் சாசனத்தின் பலத்தை அப்போது காண்பிக்கும்.” என்று பதிலளித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகையின் போது பசுவை மீட்க வருபவர்களை அடித்து உதைத்து சிறையில் தள்ளுங்கள் என்று அவர் எந்த வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் படிக்க: கர்நாடகாவில் பசு மாட்டைக் கொல்வதாகப் பரப்பப்படும் மணிப்பூரின் பழைய வீடியோ !

மேலும் படிக்க: உ.பியில் பசு மாட்டைத் தாக்கிய நபரை காவல் துறையினர் தாக்கியதாகப் பரப்பப்படும் பொய் !

முடிவு:

நம் தேடலில், கர்நாடகாவில் பசுவதையை ஊக்கப்படுத்தும் காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே என்று பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், அவர் பசு பாதுகாப்பாளர்கள் (கௌ ரக்க்ஷாக்கள்) எனக் கூறிக் கொண்டு வன்முறைகளைத் தூண்டும் நபர்களை கைது செய்யுமாறு பேசியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader