வசூல் செய்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கார்த்திக் கோபிநாத் கூறினாரா ?

பரவிய செய்தி

பாஜக கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய கோயில். மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக பொய்களை பரப்பி 33 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து திருடிய பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத். அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பாதி பணத்தை மத்திய மந்திரிகளை திருப்தி படுத்த செலவு செய்ததாகவும் போதையில் உளறல்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சிறுவாச்சூர் கோவிலில் சேதப்படுத்தப்பட்ட சிலைகளை மீண்டும் புணரமைக்கப் போவதாகக் கூறி பல லட்சங்களை வசூல் மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரால் இளைய பாரதம் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவரும், பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கார்த்திக் கோபிநாத் பற்றி கேட்ட போது, கார்த்திக் கோபிநாத் என்பவர் யார், அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், சிறுவாச்சூர் கோவில் குறித்து பணம் வசூல் செய்ததற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் எனக் கேள்வி இருந்தார்.

இதனால், கார்த்திக் கோபிநாத் மீதான குற்றச்சாட்டு எழுந்தது முதல் அவருடன் அண்ணாமலை இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட போது பாஜக துணை நிற்பதாக அண்ணாமலை ட்வீட் பதிவிட்டது வைரலாகியது.

இதையடுத்து, பணம் வசூல் செய்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக கார்த்திக் கோபிநாத் மது போதையில் உளறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கடந்த சில நாட்களாக சிறுவாச்சூர் கோவில் பெயரைப் பயன்படுத்தி கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. தற்போது வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு மே 15-ம் தேதியிடப்பட்டு இருக்கிறது. அன்றைய தேதியில் ஜூனியர் விகடன் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.

மேலும், வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link  

சிறுவாச்சூர் கோவில் பெயரைப் பயன்படுத்தி வசூல் மோசடி செய்துள்ளதாக பதிவான புகாரில் கார்த்திக் கோபிநாத் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளார். காவல்துறை விசாரனைக்கு பிறகே சிறுவாச்சூர் கோவில் பேரில் வசூல் செய்யப்பட்டது குறித்த முழுமையான தகவல் வெளிவரும்.

முடிவு : 

நம் தேடலில், சிறுவாச்சூர் கோவில் பேரில் 33 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் மோசடி செய்த பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத், அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், பாதி பணத்தை மத்திய மந்திரிகளை திருப்தி படுத்த செலவு செய்ததாகவும் போதையில் உளறியதாகவும் பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader