இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ| உண்மை என்ன ?
பரவிய செய்தி
இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்கும் கருணாநிதி
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலில் விழும் காட்சி என இவ்வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
காலில் விழுந்த கவரிமான்… மான் மான் மான் 😜 pic.twitter.com/yeSvWTCpZC
— Madan Ravichandran (@MadanRavichand4) October 10, 2020
உண்மை என்ன ?
அக்டோபர் 19-ம் தேதி புதியதலைமுறை செய்தியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவின் கோவை சத்யன் என்பவர் கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்குகிறார் என சமூக வலைதளத்தில் பரவிய இவ்வீடியோவைக் காண்பித்து பேசிய உள்ளார்.
கோவை சத்யன் வீடியோவைக் காண்பித்து கூறிய குற்றச்சாட்டை திமுக சார்பில் கலந்து கொண்ட பேராசிரியர்.கான்ஸ்டன்டைன் மறுத்து இருந்தார். மேலும், நெறியாளரும் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்கிற தகவலை வழங்குமாறு கேட்ட போது கோவை சத்யன் அதற்கான தகவலை அளிக்கவில்லை.
வைரலாகும் வீடியோவில் கருணாநிதி வயதான பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்குகிறார். வெறும் 3 நொடிகள் கொண்ட வீடியோவில் கருணாநிதி காலில் விழுந்து வணங்குபவரின் உயரம், தோற்றம் போன்றவை இந்திரா காந்தியைப் போல் இல்லை. கருணாநிதியை விட உயரம் குறைவானவராக தோற்றமளிக்கிறார்.
கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுவதாக வைரலான வீடியோ திரிக்கப்பட்டு உள்ளதாகவும், வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி இல்லை, பேரறிஞர் அண்ணாவின் மனைவி என திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை – அண்ணா அறிவாலயத்தின் திறப்புவிழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணா அவர்களிடம், தலைவர் கலைஞர் அவர்கள் ஆசி பெற்றார்;
அந்த வீடியோவை திரித்து – மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள்!#AdmkFails pic.twitter.com/HExqGzUAf4
— #DMK4TN (@DMK4TN) October 20, 2020
DMK4TN எனும் ட்விட்டர் பக்கத்தில், ” சென்னை – அண்ணா அறிவாலயத்தின் திறப்புவிழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணா அவர்களிடம், தலைவர் கலைஞர் அவர்கள் ஆசி பெற்றார்; அந்த வீடியோவை திரித்து – மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள்! ” என கோவை சத்யன் பேசும் காட்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்கள்.
1987-ம் ஆண்டு சென்னை அறிவாலயத்தின் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரை கலந்து கொண்ட போது அவரிடம் கருணாநிதி ஆசீர்வாதம் வாங்கிய காட்சி என திமுகவினர் கூறுகின்றனர். அறிவாலயம் திறப்பு விழாவிற்கு முன்பாகவே 1984-ம் ஆண்டில் இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார்.
2018-ம் ஆண்டு விகடனில் ” தொண்டர்களுக்கு அறிவாலயம்… கருணாநிதிக்கு உயிராலயம்! ” எனும் தலைப்பில் வெளியான அறிவாலயம் குறித்த கட்டுரையில், ” 16-09-1987 அன்று நடந்த அண்ணா அறிவாலயம் திறப்பு விழா கண்டதாகவும், அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின்போது பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணியம்மையார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சோனியா காந்தியும் வருகை தந்திருந்தார் ” என வெளியாகி இருக்கிறது.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டியில் (11-03-87) இருந்து என 2017-ல் விகடன் வெளியிட்ட கட்டுரையில், ” கருணாநிதியும், அண்ணாவின் மனைவியும் பேசும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்குவதாக பரவும் வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி அல்ல, அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரை என அறிய முடிகிறது.