கடந்த 4 ஆண்டில் தீவிரவாதத்தில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை தெரியுமா ?
பரவிய செய்தி
காங்கிரஸ் மற்றும் மோடி ஆட்சியில் காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த எண்ணிக்கை. 2014-ல் இருந்தே இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
2018-ல் காஷ்மீரின் உள்ளூர் இளைஞர்கள் 191 பேர் பல்வேறு தீவிரவாதத்தை ஏற்று இயக்கங்களில் இணைந்து உள்ளதாக இராணுவ உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் ஆட்சியை விட மோடியின் சமீபத்திய நான்கு ஆண்டு ஆட்சியில் அதிகளவில் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைகின்றனர்.
விளக்கம்
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்த செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த இளைஞர்கள் குறித்த எண்ணிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பிஜேபி & காங்கிரஸ் ஆட்சி :
காங்கிரஸ் ஆட்சியில் 2010-ல் இருந்து 2014 வரையில் பயங்கரவாதத்தின் கீழ் போராளிகளாக இணையும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 60 என்ற எண்ணிக்கையை தாண்டவில்லை. 2014-க்கு பிறகு போராளி இயக்கங்களில் இணையும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்துள்ளது.
“ 2016-ல் 88 இளைஞர்கள், 2017-ல் 126 இளைஞர்கள், 2018-ல் காஷ்மீர் மாநிலத்தின் 191 உள்ளுர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்து உள்ளதாக இராணுவ உயர் அதிகாரியே தகவல் தெரிவித்து இருந்தார் ”.
தெற்கு காஷ்மீர் மாவட்டங்களான புல்வாமா, ஷோபியன், குல்கம், அனந்த்நாக் ஆகியவற்றில் இருந்தே தீவிரவாத இயக்கங்களின் எண்ணிக்கை பெருகுவதாக கூறப்படுகிறது.
“ 2010-ம் ஆண்டில் 54 இளைஞர்கள் தீவிரவாதத்தில் சேர்ந்தனர். அதேநேரத்தில், 2011-ல் 23 இளைஞர்கள், 2012-ல் 21 இளைஞர்கள், 2013-ல் 16 இளைஞர்கள் என எண்ணிக்கை குறையத் தொடங்கியது “ என ராணுவ அதிகாரி குறிப்பிட்டு இருந்தார்.
இளைஞர்கள் எவ்வாறு தீவிரவாதத்தை கையில் எடுத்துக் கொள்வது அதிகரிக்கிறதோ, அதேபோன்று கொல்லப்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 2018-ல் மட்டும் 257 -க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது ஆண்டிற்கு கிட்டத்தட்ட 200 பேர் தீவிரவாதத்தை பின்பற்றி கையில் ஆயுதத்தை எடுக்கின்றனர்.
மேலும் படிக்க : பிஜேபி & காங்கிரஸ் ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை.
படித்த இளைஞர்கள் தீவிரவாதத்தில் ?
“ நன்கு படித்த இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைவது புதிய நிகழ்வு அல்ல. இயல்பாகவே அங்குள்ள சூழ்நிலை அப்படி, சில படித்தவர்களிடம் கூட அதன் தாக்கம் ஏற்படுகிறது. இதில், ஆச்சரியம் ஒன்றுமில்லை. நாட்டிற்கு எதிரான இயக்கங்கள் தங்களிடம் இணைவதற்காகவே நன்கு படித்தவர்களை ஊக்குவிக்கின்றனர். அறிவாற்றல் மிகுந்தவரிடம் தலைமை செல்வதை விரும்புகின்றனர் “ என டெல்லியில் உள்ள Institute of Conflict Management-ன் இயக்குனர் மற்றும் நிறுவன உறுப்பினர் அஜய் சஹானி தெரிவித்து இருந்தார்.
உதாரணம் :
காஷ்மீரின் Tral நகரின் Laribal கிராமத்தில் இருந்து 10-ம் வகுப்பில் 98.4 சதவீதம் மற்றும் 12-ம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இஷாக் என்ற மாணவன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவனாக இருந்ததால் அவனை நண்பர்கள் “ நியூட்டன் “ என அழைத்து உள்ளனர்.
மருத்துவராக வேண்டும் என படித்துக் கொண்டிருந்த மாணவன் 2016 அக்டோபரில் திடீரென வீட்டை விட்டு சென்று ஹிசப் என்ற இயக்கத்தில் சேர்ந்தான். விளைவு, ஒரே வருடத்தில் அந்த நகரத்தில் நடந்த தூப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டான்.
காஷ்மீர் இளைஞர்கள் அதிகளவில் தீவிரவாதத்தை ஏற்பது அமைதிக்கு வழிவகுக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.