தமிழர்களுக்கு தனித்த அடையாளம் இல்லை என்றாரா பொன்.ராதாகிருஷ்ணன் ?
பரவிய செய்தி
கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது கிடையாது. ஹிந்து கலாச்சாரம் தான் தமிழ் கலாச்சாரம் – பொன்.ராதாகிருஷ்ணன்.
மதிப்பீடு
விளக்கம்
கீழடியில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் தோண்ட தோண்ட கிடைத்து வருகையில் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் மூலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழ் குடிகள் எழுத்தறிவு உடன் இருந்து உள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
கீழடி ஆதாரங்கள் வரலாற்றை மாற்றி வரும் வேளையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ” கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது கிடையாது. ஹிந்து கலாச்சாரம் தான் தமிழ் கலாச்சாரம் ” எனக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
பாஜகவின் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு கூறினாரா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். பரவி வரும் தந்தி டிவி நியூஸ் காரில் செப்டம்பர் 20-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆகையால், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்திற்கு சென்று 20-ம் தேதி செய்திகளை தேடிப் பார்த்தோம்.
அன்றைய தேதியில், ” நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை – பொன். ராதாகிருஷ்ணன் ” என்ற செய்தி மட்டுமே அவரின் பெயரில் வெளியாகி இருக்கிறது. பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.
அந்த செய்தி வெளியான நியூஸ் கார்டில் கீழடி குறித்து தவறான செய்தியை போட்டோஷாப் செய்து வதந்தியை பரப்பி வருகின்றனர். இதற்கு முன்பாக, அதிமுக எம்.பி ரவீந்தரநாத்-க்கும் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பது போன்று போட்டோஷாப் செய்தியை பரப்பி இருந்தனர்.
சமீபகாலமாக செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டு மூலம் போலியான செய்திகளை அரசியல் நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.