கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை கிழித்தவர் தாக்கப்பட்டதாக வெளியான தவறான செய்திகள் !
பரவிய செய்தி
பாஜக தொண்டரை தாக்கிய கால்பந்து ரசிகர்கள். கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை, கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் !
மதிப்பீடு
விளக்கம்
கத்தார் நாட்டில் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை அங்குள்ள கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக அடிபட்ட காயங்களுடன் இருக்கும் நபரின் புகைப்படம் சன் நியூஸ், கலைஞர் செய்திகள், மின்னம்பலம் உள்ளிட்ட செய்திகளும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
கேரளா : போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து சேதப்படுத்திய பாஜக தொண்டரை சரமாரியாக தாக்கிய கால்பந்து ரசிகர்கள் pic.twitter.com/CoOAGHMJkV
— DON Updates (@DonUpdates_in) November 20, 2022
உண்மை என்ன ?
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து பாஜகவைச் சேர்ந்த தீபக் இளங்கட்டை என்பவர் கிழித்து எறிந்ததாக வீடியோ ஒன்று வெளியாகியது. அது தமிழகத்திலும் செய்தியாக வெளியாகியது. இதைத் தொடர்ந்தே அந்த நபர் கால்பந்து ரசிகர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து கேரளாவின் பானூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” போர்ச்சுகல் கொடி கிழிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதன் தொடர்ச்சியாக எந்த வன்முறையும், தாக்குதலும் நடைபெறவில்லை. அந்த நபர் தாக்கப்பட்டதாக எந்த வழக்கும்(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யவும் இல்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
செய்திகளில் பாஜக நபர் போர்ச்சுகல் கொடியை கிழித்ததாகவே வெளியாகி வருவதால் , இதுகுறித்து பாஜகவின் பானூர் மண்டல பொறுப்பாளர் ஷிஜி லால் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” சம்பந்தப்பட்ட நபருக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பாஜக உறுப்பினர் இல்லை. இதன் தொடர்ச்சியாக எதாவது நடவடிக்கை எடுத்தால் தனிப்பட்ட முறையில் அவரே சந்திக்க வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
வைரலான வீடியோவில் இடம்பெற நபரும், தாக்கப்பட்டதாக பரவும் புகைப்படத்தில் இருப்பவரும் வெவ்வேறு நபர்கள்.
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது, அப்படி எந்த தாக்குதலும் நிகழவில்லை. மேலும், தாக்கப்பட்டதாக பரவும் நபரின் புகைப்படமும் தவறானது என அறிய முடிகிறது.