கேரளாவில் ஹிஜாப் அணிந்த சிறுமியைத் தாக்கியவர் ஆர்எஸ்எஸ் நபர் எனப் பரவும் வதந்தி !
பரவிய செய்தி
கேரளாவில் ஒரு வெறிப்பிடித்த RSS ‘BJP’ சங்கி, ஹிஜாப் அணிந்து மதரசா செல்ல நிற்கும் சிறுமியை தூக்கி வீசி எறிந்துட்டு போறான்.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கிற்கு கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பும் வழங்கப்பட்டது.
அவ்வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் இரண்டு மாறுபட்ட கருத்துகளை அத்தீர்ப்பில் குறிப்பிட்டதால் வழக்கு இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நபர் ஒருவர் ஹிஜாப் அணிந்த சிறுமியைத் தூக்கி தரையில் அடிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஹிஜாப் அணிந்த சிறுமி தரையில் தூக்கி அடிக்கப்படும் சிசிடிவி கட்சியில் இடதுபுறம் மேல் ஓரத்தில் காசர்கோடு, கேரளா என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
இச்சம்பவம் தொடர்பாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 2022, நவம்பர் 18ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் நகருக்கு அருகிலுள்ள உத்யாவரம் என்ற பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியைத் தூக்கி தரையில் வீசிய அபூபக்கர் சித்திக் என்ற நபரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது குறித்து கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மனோரமா நியூஸ் நவம்பர் 17ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் இத்தகவல்களே குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேபோல, நவம்பர் 18ம் தேதி, நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சிறுமியைத் தாக்கிய நபர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நபர் எதற்காக அச்சிறுமியைத் தரையில் தாக்கினார் என்ற காரணத்தைக் காவல் துறை கண்டறியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவல் தான் NDTV-லும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
படிக்க : Man flinging the minor girl in Kerala is not a Hindu extremist
இந்த வீடியோ தகவல் குறித்து கடந்த நவம்பர் 19ம் தேதியே யூடர்ன் ஆங்கில இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், கேரளா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த சிறுமியைத் தாக்கிய நபர் அபூபக்கர் சித்திக் ஒரு முஸ்லிம். அவர் ஆர்.எஸ்.எஸ். நபர் கிடையாது என அறிய முடிகிறது.