பிரிட்டன் மன்னர் புற்றுநோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 24 மணிநேரம் காத்திருந்ததாகப் பரவும் பொய் செய்தி !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த மாதம் புரோஸ்டேட் வீக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர் ஜனவரி 29 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சிகிச்சைக்கு பின் அவருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி பக்கிங்காம் அரண்மனை கடந்த 6 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் எந்த மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார், என்ன வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில் கிங் சார்லஸ் 24 மணிநேரம் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருந்தார் என்று கூறி, அவர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தோடு சேர்ந்து “கிங் சார்லஸ் 24 மணிநேரம் மருத்துவமனை நடைபாதையில் காத்திருந்ததற்கு பிறகு, NHS காத்திருப்பு பட்டியல்களை சரிசெய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
King Charles who rules Great Britain, suffering from cancer had to wait for one hour to see the dr. But, any citizen of Tamilnadu can walk in with a medical emergency into any Govt Medical College Hospital of Tamilnadu, at any hour on any day, & will be immediately seen by the… pic.twitter.com/ahxnGXtdLP
— Dr Jaison Philip. M.S., MCh (@Jasonphilip8) February 8, 2024
NEWS! Government urged to fix NHS waiting lists after King Charles spends 24 hours on trolley in hospital corridor https://t.co/YibjoGXrFS pic.twitter.com/lCX5HUmTBu
— NewsThump (@newsthump) February 5, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் மன்னர் சார்லஸின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இந்த புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய, hivemoderation இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். அதில் இந்த புகைப்படம் 99.3% AI மூலம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இது நமக்கு தெளிவுப்படுத்தியது.
மேலும் இந்தப் புகைப்படம் மற்றும் செய்தியானது முதன்முதலில் News Thump என்ற வலைத்தளப் பக்கத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் AI புகைப்படத்துடன் சேர்த்து “கிங் சார்லஸ் 24 மணிநேரம் மருத்துவமனை நடைபாதையில் காத்திருந்ததற்கு பிறகு, NHS காத்திருப்பு பட்டியல்களை சரிசெய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 6 ஆம் தேதி கட்டுரை ஒன்றும் வெளியிட்டு இருந்தது.
எனவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ள News Thump இணையதளம் குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். அதில், “நியூஸ் தம்ப் என்பது பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்டு நையாண்டி செய்திகளை வெளியிடும் ஒரு இணையதளம். இது பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நடப்பு நிகழ்வுகளை வெளியிடும். இறுதியில் அனைவரையும் கேலி செய்வதே எங்களின் குறிக்கோள். இது முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இரண்டு வாரங்களுக்குள் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிரிட்டனில் அரசு மருத்துவ சேவைக்கு (National Health Service) செல்லும் புற்றுநோய் நோயாளிகள் பல நாட்களாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுதால், மன்னர் சார்லஸ் புற்றுநோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை AI புகைப்படத்துடன் நையாண்டியாக News Thump இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த நையாண்டி செய்தியை உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பிபிசி மீதான ஐடி ரெய்டு காரணமாக மோடிக்கு எதிராக லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனரா ?
மேலும் படிக்க: அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் லண்டன் ரதயாத்திரை வீடியோ !
முடிவு:
நம் தேடலில், பிரிட்டன் மன்னர் சார்லஸ் 24 மணிநேரம் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருந்தார் என்று கூறி பரவி வரும் செய்தி மற்றும் புகைப்படம் பொய்யானவை என்பதை அறிய முடிகிறது.