லுலு மாலில் இந்தியக் கொடியைவிடப் பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

இந்த புகைப்படம் கேரளா கொச்சியில் உள்ள லூலூ மாலில் உலக கோப்பையை கொண்டாடும் வகையில் பல்வேறு நாடுகளின் கொடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . FLAG குறியீட்டின் படி மூவர்ண கொடிக்கு மேலேயோ அதைவிட உயரமாகவோ அல்லது அதற்கு இணையாகவோ வேறு எந்த கொடியும் வைக்க கூடாது . பிற கொடிகளுடன் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்த அனுமதி இல்லை . இந்திய கொடியை விட பாகிஸ்தான் கொடி ஏன் பெரியது ? @Yusuffali_MA இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறீர்கள் ? பாகிஸ்தான் உங்களுக்கு முன்னுரிமை என்று சொல்ல முயற்சிக்கிறீர்களா ?

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 கடந்த 5ம் தேதி (அக்டோபர்) தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள லுலு மாலில் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி இந்தியக் கொடியை விட உயரத்திலும், பெரியதாகவும் வைக்கப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

Facebook link 

லுலு மாலின் இத்தகைய செயல் இந்தியத் தேசியக் கொடி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கொடியை அவமதிக்கும் செயல் என்றும் அப்பதிவுகளில் குறிப்பிடுகின்றனர். 

Archive link

உண்மை என்ன ? 

லுலு மாலில் வைக்கப்பட்ட கொடிகள் குறித்து அந்நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதில் பரவக் கூடிய தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிந்தது.

Jyothish’ (_momz_kid_kl08) என்பவர் கொச்சியில் உள்ள லுலு மாலில் எடுத்த தனது புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நிற்பதற்குப் பின்னால் பாகிஸ்தான் கொடி உள்ளது. அப்படத்தில் இடது பக்கத்தில் இங்கிலாந்து நாட்டுக் கொடியும் உள்ளது. இரண்டு கொடிகளும் உயரத்தில் சிறிய வித்தியாசம் இருப்பதைப் போன்று தோற்றமளிக்கிறது.

அதே நேரத்தில் அக்கொடிகளுக்கும் பின்னால் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச நாட்டுக் கொடிகள் சிறியதாகவும் கீழே இறக்கிக் கட்டப்பட்டது போன்றும் தெரிகிறது.

மேலும் இது குறித்துத் தேடியதில் GAURAV CHAUDHARY’ என்பவர் லுலு மாலில் வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் இந்தியக் கொடி பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டுக் கொடிகளை விட பெரியதாகவும் உயரத்திலும் இருப்பது போன்று காட்சியளிக்கிறது.

Archive link

இது குறித்து யூடர்னில் இருந்து லுலு மால் தகவல் பிரிவில் உள்ள ஒசோனா என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியதில் “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவை LED திரையில் ஒளிபரப்பிய போது போட்டியில் கலந்து கொள்ளும் நாட்டின் கொடிகள் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த நிலையில் கொடிகள் அகற்றப்பட்டு விட்டது. 

எல்லா கொடிகளும் ஒரே அளவிலும் ஒரே உயரத்திலும் தான் வைக்கப்பட்டன. ஆனால், வேறுபட்ட கோணம் மற்றும் எந்த மாடியில் (உயரத்தில்) இருந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து ஒரு நாட்டின் கொடி பெரியதாகவும் உயரத்திலும் இருப்பது போன்று தோற்றமளிக்கும். அப்படி பாகிஸ்தான் நாட்டுக் கொடி பெரியதாகவும் உயரமாகவும் இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்” என விளக்கம் அளித்தார்.  

லுலு மால் தரப்பு விளக்கத்திலிருந்தும் கிடைக்கப்பட்ட பிற படங்களிலிருந்தும் அனைத்து நாட்டுக் கொடிகளும் ஒரே அளவிலும் ஒரே உயரத்திலும் தான் வைக்கப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

மேலும் படிக்க : கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !

இஸ்லாமிய மத கொடியைப் பாகிஸ்தான் கொடி எனப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். 

மேலும் படிக்க :  திமுக பிரச்சாரத்தில் இருந்த முஸ்லீம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடியென வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள லுலு மாலில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி வைக்கப்பட்ட கொடிகளில் இந்தியக் கொடியைவிட பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவிய செய்தி உண்மை அல்ல. அனைத்து கொடிகளும் ஒரே உயரத்திலும், ஒரே அளவில்தான் வைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பிற படங்களிலிருந்தும் மால் தரப்பு விளக்கத்திலும் அறிய முடிகிறது. படம் எடுத்த கோணத்தைப் பொறுத்து அப்படிக் காட்சியளிக்கிறது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader