லலிதா ஜுவல்லரி திருட்டில் பிடிபட்டது பாஜக பொருளாளரா ?| வதந்திகள் ஏராளம்.
பரவிய செய்தி
லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை சம்பவத்தில் கைதான மணிகண்டன் திருவாரூர் விளமல் பகுதி பாஜக பொருளாளர்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவம் பெரிதளவில் செய்தியாக உருவெடுத்து வருகிறது. திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளையர்கள் கிலோ கணக்கில் தங்க நகைகள், வைரம், பிளாட்டினத்தை கொள்ளையடித்து சென்றனர்.
லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாளே திருவாரூர் அருகே உள்ள விளமல் பகுதியில் காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது உதவி ஆய்வாளர் பாரத் நேருவிடம் கொள்ளையர் ஒருவர் சிக்கிக் கொண்டார். அவர் திருவாரூர் அருகே உள்ள மடப்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் எனச் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
காவல்துறையிடம் சிக்கிய கொள்ளையன் மணிகண்டன் உடைய புகைப்படம் செய்திகளில் வெளியாகத் துவங்கியது. அவர் திருவாரூர் விளமல் பகுதியின் பாஜக பொருளாளர் என முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பலரும் பதிவிடத் துவங்கினர். மீம்ஸ் மூலமும் கொள்ளையன் மணிகண்டன் பாஜக கட்சியை சேர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்றவர் என்றெல்லாம் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
” திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையில் பிடிபட்ட மணிகண்டன் விளமல் பகுதியின் பாஜக பொருளாளர் என முதன்மை செய்திகளில், ஊடங்களில் எங்கும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் தனிப்பட்ட கருத்துகள் மூலமே பரவி வருகிறது. மேலும், கொள்ளையன் கைது செய்யப்பட்ட இடம் விளமல் பகுதி என்பதால் அந்த பெயரைக் குறிப்பிட்டு பகிரத் துவங்கியுள்ளனர் “.
அதுமட்டுமின்றி, காவல்துறையிடம் பிடிபட்ட கொள்ளையன் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஓர் படத்தை பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த படமும் போட்டோஷாப் செய்யப்பட்டவையே.
சசிகலாவின் உறவினரான திவாகரன் இருக்கும் புகைப்படத்தில் ஹெச்.ராஜா உடைய தலையை போட்டோஷாப் செய்து தெரிந்தே கிண்டலுக்காக வதந்தியை பரப்பி உள்ளனர். இது தொடர்பான விவாதங்களும் முகநூலில் அரங்கேறி வருகிறது.
எங்கு தொடங்கியது ?
இப்படி கட்சி சார்ந்து வதந்திகள் பரவக் காரணம், பாஜக ஆதரவாளர்களுக்கும், திமுக ஆதரவாளர்களுக்கும் இடையே உருவான கிண்டல் மோதலே. கொள்ளையன் திருவாரூரில் பிடிபட்டது என ஒரு தரப்பு கிண்டல் செய்ய, பிடிபட்டவன் பாஜக பொருளாளர் எனக் கூற வைரலாகி விட்டது.
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையர்கள் *திருவாரூரில்* கைதாம்! – செய்தி
என்னமோ ஏதோ?
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் திரழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…— SG Suryah (@SuryahSG) October 4, 2019
அக்டோபர் 3-ம் தேதி தமிழக பாஜகவின் எஸ்.ஜி சூர்யா என்பவர் ” திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையர்கள் *திருவாரூரில்* கைதாம்! – ” என கிண்டல் பதிவை பதிவிட, அதில் பிடிபட்ட கொள்ளையன் பாஜகவைச் சேர்ந்தவராம் என பலரும் கமெண்ட் செய்யத் துவங்கினர்.
முடிவு :
நமக்கு கிடைத்த தகவலில், திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையன் பாஜக கட்சியின் விளமல் பகுதி பொருளாளர் என பரப்பப்படும் பதிவுகள் அரசியல் நோக்கம் கொண்ட வதந்திகளே. அதற்கு ஆதாரங்கள் இல்லை.
கொள்ளையில் ஈடுபட்டவர்களை ஒருவர் பின் ஒருவராக காவல்துறை கைது செய்து வருகிறது. இதற்கிடையில், வதந்திகளை பரப்பி கிண்டல் செய்வது சரியானது செயல் அல்ல.