உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என லயோலா கருத்துக்கணிப்பு வெளியிட்டதா ?
பரவிய செய்தி
2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க உள்ளது. ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவை சந்திப்பது இதுவே முதல்முறை என லையோலா கருத்து கணிப்பில் கூறப்பட்டனர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டதாக தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரியோ அல்லது அதன் முன்னாள் மாணவர்கள் அமைப்போ என யாரும் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக எந்த தகவலும் இல்லை. வைரல் செய்யப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், அந்த சேனலின் முகநூல் பக்கத்திலும் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு பற்றி தேடுகையில், 2015 ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பற்றி வெளியான செய்திகளில் இடம்பெற்ற புகைப்படத்தை எடுத்து போலியான செய்திக்கு பயன்படுத்தி உள்ளார்கள்.
மேலும் படிக்க : லயோலா கல்லூரியின் நிலம் சிவன் கோவிலுக்கு சொந்தமானதா ?| வதந்தி பதிவு !
மேலும் படிக்க : லயோலா சொத்துவரி பாக்கி அறிவிப்பை வைத்தே கோவில் நில குத்தகை முடிவதாக விஷம பதிவு !
முடிவு :
நம் தேடலில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகவும் பின்னடைவை சந்திக்க உள்ளது என லயோலா கருத்து கணிப்பில் வெளியாகியதாக பரவும் செய்தி போலியானது. அப்படி எந்த கருத்துக் கணிப்பும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.