கேஸ் விலை குறைய விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை ?
பரவிய செய்தி
கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்தியே ஆக வேண்டும் – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் விநாயக சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வந்தார்.
இந்தியாவில் கேஸ் விலை அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை நடத்தியே ஆக வேண்டும் என அண்ணாமலை கூறியதாக சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டை வைத்து பாஜக தலைவர் அண்ணாமலையை ட்ரோல் செய்யும் மீம்ஸ் மற்றும் கண்டன பதிவுகளை அதிகம் பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
சன் நியூஸ் சேனலில் அண்ணாமலை குறித்த நியூஸ் கார்டு பற்றி தேடுகையில், “கேஸ் விலை உயர்வு அனைவரையும் பாதிக்கக் கூடியது தான், விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நிச்சயம் விலை குறையும் ” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வெளியான நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
கேஸ் விலை நிச்சயம் குறையும், மக்கள் பொறுமை காக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தை சன் நியூஸ் வெளியிட்டு இருக்கிறது. அதை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்தியே ஆக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் சன் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிகிறது.