லுலு நிறுவனத்திடமிருந்து அண்ணாமலை பணம் வாங்கியதாக விகடன் பெயரில் போலிச் செய்தி!

பரவிய செய்தி

லூலூ மாலிடமிருந்து 65கோடி ரூபாயை வாங்கிய அண்ணாமலை… லூலு மால் ஒரு செங்கல் கூட வைக்கமுடியாது என சொன்னார் அதன் பிறகு அதைப்பற்றி பேசவே இல்லை. காரணம் இந்த 65 கோடி.. ஆனா பேச்சு மட்டும் மகா யோக்கியன் மாதிரி..

Twitter Link | Archive Link

 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த 2022 மார்ச் மாதத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளிடையே சுற்றுப்பயணம் செய்த போது, லுலு நிறுவனத்துடன் 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3 திட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்வது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன்படி இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் மட்டும் செயல்பட்டு வந்த லுலு நிறுவனத்தின் ஹைப்பர் மார்க்கெட், கடந்த ஜூன் 14 அன்று முதல் கோவையிலும் செயல்படத் துவங்கியது.

இந்நிலையில் இந்த வார ஜூனியர் விகடன் (வெளியீட்டு தேதி: ஜூன் 21, 2023) இதழில், “கோவை லுலு.. அண்ணாமலை லாலி..” என்னும் தலைப்பில், லுலு நிறுவனத்திடமிருந்து அண்ணாமலை பணம் வாங்கியதாகக் கூறிய கட்டுரை ஒன்றின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Archive Link:

 

Archive Link:

உண்மை என்ன?

பொதுவாக ஜூனியர் விகடனின் வார இதழில் மிஸ்டர் கழுகு என்னும் தலைப்பில், கழுகார் பேசுவது போன்று கட்டுரைகள் வெளியிடப்படுவது வழக்கம்.

அதன்படி அண்ணாமலை குறித்து பரவி வரும் அந்தக் கட்டுரையில், “கடந்தாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனபோது 3.500 கோடி துபாய் முதலீட்டை செய்வதற்கான ஒப்பந்தத்தை லுலு நிறுவனம் செய்தது, இது தெரிந்த செய்திதானே லுலு, ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் என சொன்ன அண்ணாமலை ஏன் ஆஃப் ஆனார்? அந்த மர்மத்தைதான் உளவுத் துறையினர் தோண்டி எடுத்திருக்கிறார்கள்.

கர்நாடகாவில் லுலு மால் வந்த போது முதலில் பாஜகவினர் எதிர்த்தனர். அதன்பிறகு அனுமதி கொடுத்தனர். முதலில் எதிர்ப்பு பிறகு அனுமதி என கர்நாடகா ஃபார்முலாவை அப்படியே தமிழகத்தில் அண்ணாமலை அரங்கேற்றிவிட்டாராம். பத்து ஸ்வீட் பாக்ஸ் என ஆரம்பித்து கடைசியாக 65 ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியிருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே பரவி வரும் புகைப்படம் குறித்து இந்த வார ஜூனியர் விகடனின் நடப்பு இதழை (வெளியீட்டு தேதி: ஜூன் 21, 2023) இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், “கோவை லுலு.. அண்ணாமலை லாலி..” என்னும் தலைப்பில் பக்க எண் மூன்றில் எந்தவொரு கட்டுரையும் வெளிவரவில்லை என்பதை உறுதி படுத்த முடிந்தது.

மேலும் அந்த இதழில், “டெல்லி… ஆளுநர்… அமலாக்கத்துறை… மும்முனை தாக்குதலில் தி.மு.க!” என்னும் தலைப்பிலேயே கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

மேலும் அதில் “”செந்தில் பாலாஜி விஷயத்தில் தி.மு.க அரசும் கட்சியும் கொஞ்சம் ஓவராகவே பதறுகின்றன” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்வினை ஆற்றவில்லை என்றால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்கதையாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம் என்று நாம் சொல்ல, அதை ஆமோதித்தபடியே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்.” என்று குறிப்பிட்டப்படி கட்டுரை தொடர்வதையும் காண முடிந்தது.

இதன் மூலம் “மும்முனை தாக்குதலில் தி.மு.க!” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், அண்ணாமலை குறித்து ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளதாகப் பரவும் கட்டுரையின் படம் போலியானது என்பதையும், ஜூனியர் விகடனின் இந்த வார இதழின் (வெளியீட்டு தேதி: ஜூன் 21, 2023) பக்கம் மூன்றில் “மும்முனை தாக்குதலில் தி.மு.க!” என்னும் தலைப்பில் தான் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader