இந்தியாவில் உள்ள மதரஸாவில் ஆசிரியர் சிறுவனைக் கொடூரமாக தாக்குவதாகப் பரவும் பங்களாதேஷ் வீடியோ !

பரவிய செய்தி

மௌலவி இந்தக் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டு, மற்றவர்களிடம் தவறாகப் பேசுகிறார். மாற்று மதப் பிரச்சனை பற்றி பேசுவது எங்களுக்கு அவசியம் இல்லை தான் ஆனால் மதத்தின் பெயரில் கல்வி போதிக்கிறேன் என்று பச்சிளம் குழந்தையை அடித்து சித்திரவதை செய்வது நியாயமாகுமா எங்கே அந்த மனித உரிமை ஆர்வலர்கள்..Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பொதுவாக அரேபிய மொழியில் இஸ்லாம் மக்களின் கல்வி நிலையம் மதரஸா என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள மதரஸாவில் ஆசிரியர் ஒருவர் சிறுவனைக் கொடூரமாக தாக்குவதாகக் கூறி 33 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், அப்பதிவுகளில் “மாற்று மதப் பிரச்சனை பற்றி பேசுவது எங்களுக்கு அவசியம் இல்லை தான், ஆனால் மதத்தின் பெயரில் கல்வி போதிக்கிறேன் என்று பச்சிளம் குழந்தையை அடித்து சித்திரவதை செய்வது நியாயமாகுமா, எங்கே அந்த மனித உரிமை ஆர்வலர்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.

Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2021-லிருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

Archive Link:

எனவே பரவி வரும் வீடியோ குறித்து மேலும் தேடியதில், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

இந்த வீடியோ குறித்து, பங்களாதேஷின் முதன்மை ஊடகமான Dhakatribune கடந்த 2021 மார்ச் 10 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “செவ்வாய்க்கிழமை (2021 மார்ச் 09) மாலை அந்தக் குழந்தையை கண்மூடித்தனமாக அடித்ததன் காரணமாக, அல் மர்காசுல் குர்ஆன் என்னும் இஸ்லாமிய அகாடமியின் ஆசிரியரான எம்.டி யாஹ்யா கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

குழந்தையை அவர் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, உள்ளூர் அதிகாரிகளால் மதரஸாவில் இருந்து அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 மார்ச் 10 அன்று theindependent எனும் ஊடகம் வெளியிட்ட கட்டுரையில், “செவ்வாய்க்கிழமை மாலை, குழந்தையின் பிறந்தநாள் என்பதால், குழந்தையைப் பார்ப்பதற்காக அவரது தாயார் மதரஸாவுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கிளம்பும் போது அந்த சிறுவன் தன் தாயின் பின்னால் ஓடினான். அப்போது, ​​அந்த மதரஸா ஆசிரியர், அந்தக் குழந்தையின் கழுத்தைப் பிடித்து, அறைக்குள் அழைத்துச் சென்று, தரையில் வீசியெறிந்து, கைத்தடியால் கடுமையாக தாக்கினார். 

இதுகுறித்து UNO ரூஹுல் அமீன் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நான் புதன்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் காவல்துறையினருடன் மதரஸாவிற்குச் சென்று குழந்தையை மீட்டு அவரது பெற்றோரான பர்வீன் அக்தர் மற்றும் Md. ஜோய்னல் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அதன்படி குழந்தையின் தந்தை வழக்குப்பதிவு செய்ததன் பெயரில், அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஹதசாரி வட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஹாதத் ஹொசைன் உறுதிப்படுத்தினார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !

இதற்கு முன்பும், இதே போன்று பழைய வீடியோவை தற்போது நடந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பரப்பி வந்தனர். இதுகுறித்தும் ஆய்வு செய்து யூடர்னில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: கேதார்நாத் யாத்திரை சென்ற இந்து பக்தர்களை தாக்கியது முஸ்லீம் இளைஞர்கள் எனப் பரப்பப்படும் வதந்தி

முடிவு:

நம் தேடலில், இந்தியாவில் உள்ள மதரஸாவில் சிறுவனைக் கொடூரமாக தாக்குவதாக பரப்பப்படும் வீடியோ தவறானது என்பதையும், இந்த வீடியோ கடந்த 2021 மார்ச் 9 அன்று பங்களாதேஷில் உள்ள ஒரு மதரஸாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader