பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை வைப்பதாகப் பரப்பும் போலிச் செய்தி கார்டு!

பரவிய செய்தி

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி !!! கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 60வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கும் ஆணையை பசும்பொன்னில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி.

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயர் சூட்டும் ஆணையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 30ம் தேதி வெளியிட உள்ளதாக தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படி பரவும் நியூஸ் கார்டை பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருகின்ற 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்ள மோடி வருவதாக செய்தி ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

Facebook link 

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரின் பயணம் மற்றும் அவர் எந்தெந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கும் ஆணையை வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், தந்தி டிவி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. பிரதமர் வருகை குறித்த செய்தியும் கூட வெளியிடப்படவில்லை.

வைரல் செய்யப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டில் புகைப்படம், லோகோ மற்றும் எழுத்து உள்ளிட்டவை எடிட் செய்யப்பட்டு இருகிறது.  இதுபோலியான நியூஸ் கார்டு என தந்தி டிவியும் தெரிவித்து உள்ளது.

மேலும் படிக்க : கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பதிவு.

மேலும் படிக்க : ஹெச்.ராஜா முத்துராமலிங்கத் தேவர் சிலையை வணங்கவில்லையா?| பிராமண சங்கம் நன்றி கூறியதாக வதந்தி !

இதற்கு முன்பாக, அரசியல் ரீதியாக முத்துராமலிங்கத் தேவரைப் பயன்படுத்தி பரப்பப்பட்ட பல போலிச் செய்திகள் குறித்து நாம் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : முத்துராமலிங்கத் தேவரால் சர்ச்சை ஏற்படும் என டி.ஆர்.பி.ராஜா கூறியதாகப் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கும் ஆணையை பிரதமர் மோடி பசும்பொன்னில் வெளியிடப் போவதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader