காசாவில் இறந்தவர்களின் உடல்கள் முழித்து பார்ப்பதாக தவறாகப் பரப்பப்படும் மலேசியா வீடியோ !
பரவிய செய்தி
இஸ்ரேலிய தோட்டாக்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொன்றாக உயிர்பெற்று வருவதாகத் தெரிகிறது. காசாவின் தியாகிகள் ஒருபோதும் இறப்பதில்லை.
மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரேல் பாலஸ்தீனப் போரில் இதுவரை 9700-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமாக நடந்து வரும் இப்போரில் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் தொடர்ந்து மூன்றாவது முறையாக காசாவில் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காசாவில் உயிரிழந்துள்ள பிணங்கள் மீண்டும் உயிர்ப்பெற்றதாக கிண்டல் செய்யும் வாசகங்களுடன் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள பிணங்கள் தலையை எட்டி பார்ப்பதும், கண் திறந்து பார்ப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பலர் இந்த வீடியோவை பிணம் எழுந்துவிட்டது என்று கூறி நையாண்டியாக பதிவு செய்வதையும் காண முடிகிறது.
என்னடா பிணம் எந்திரிச்சு 🤣🤣 pic.twitter.com/LxpWNr1tE8
— Bheema (@Bheema4K) November 6, 2023
— E Chidambaram. (@JaiRam92739628) November 6, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ காசாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
zayan.my என்ற மலேசிய ரேடியோ சேனல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை கடந்த அக்டோபர் 28 அன்று “நமக்காக ஒரு தலையணை இருக்கும் போது கண்களை மூடி படுத்திருப்பது நன்றாக தான் இருக்கும்” என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும் அதில் டிக்டாக்கில் metjetak17 என்பவரது பக்கத்திலிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
View this post on Instagram
இதேபோன்று d_mrsPanda என்பவரது எக்ஸ் பக்கத்திலும் இந்த வீடியோ குறித்து பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், “இந்த வீடியோ மலேசியாவில் எடுக்கப்பட்டது. எங்கள் மசூதியில் எப்போதும் “ஜனாஸா மேலாண்மை குறித்த வகுப்புகள்” கற்பிக்கப்படும். அதில் இறந்த உடலை எவ்வாறு பேணுவது என்பது பற்றி கற்றுக் கொடுப்பார்கள். மேலும் இந்த வீடியோவில் சிவப்பு ஆடை அணிந்த ஒருவரை நீங்கள் மைக்குடன் பார்க்க முடியும். அவர் ஒரு பயிற்றுவிப்பாளர். இந்த வீடியோ போர் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் 19 அன்று எடுக்கப்பட்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Its Malaysia. The outfit. The scenary. Our mosque always have Janazah Management Course. They teach how to manage dead body. You can even see the pink shirt guy with mic. He must be an instructor. And this tiktok posted 8/19. Way before the war start. pic.twitter.com/2qNg0ggDie
— d_mrsPanda🏴☠️ (@d_n0112) November 5, 2023
எனவே இது மலேசியாவில் எடுக்கப்பட்டது தானா என்பதை உறுதி செய்ய டிக்டாக் பக்கத்திலும் ஆய்வு செய்து பார்த்தோம். metjetak17 என்ற மலேசிய டிக்டாக் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 19 அன்றே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ இஸ்ரேல் பாலஸ்தீனப் போருக்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
இதற்கு முன்பும் இறந்த சடலங்கள் உயிர் பெற்றன என்று கூறி பல புகைப்படங்களை தவறாக பரப்பி வந்தனர். இதன் உண்மை தன்மைக் குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், காசா போரில் இறந்தது போல் நடிப்பதாகவும், இறந்த உடல் உயிர் பெற்றது எனப் பரவி வரும் வீடியோ, இஸ்ரேல் பாலஸ்தீனப் போரின் போது எடுக்கப்பட்டத்தல்ல என்பதையும், இது மலேசியாவில் இறந்த உடல்களைப் எப்படி பேணுவது பற்றி கற்பிக்கப்படும் ‘ஜனாஸா மேலாண்மை’ குறித்த வகுப்புகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.