முஸ்லீம் பகுதிகளுக்கு செல்வதற்கு முன் கார்கே நெற்றியில் உள்ள திலகத்தை அழிப்பதாகப் பொய் பரப்பும் துக்ளக் குருமூர்த்தி !

பரவிய செய்தி

மல்லிகார்ஜுன கார்கே இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற பிறகு,  முஸ்லீம் பகுதிகளுக்கு செல்வதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நெற்றியில் உள்ள திலகத்தை அழிக்கும் காட்சி.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே முஸ்லீம் பகுதிகளுக்கு செல்வதற்கு முன் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்துக்கொள்கிறார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் அப்பதிவுகளில், “இப்படித்தான் காங்கிரஸ் தலைவர்கள் இந்துக்களை முட்டாளாக்குகிறார்கள். இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது வலுக்கட்டாயமாக திலகம் வைத்துக் கொள்வார்கள், முஸ்லீம் பகுதிகளில் இருக்கும் போது துடைத்து விடுவார்கள்.” என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர்.

Archive Link

Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கடந்த ஏப்ரலில் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதைக் காண முடிந்தது.

இதன் முழுவீடியோ குறித்து தேடியதில், Indian National Congress என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 26 அன்று “நேரலை: கர்நாடகாவின் ஹூப்ளியில் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கேவின் செய்தியாளர் சந்திப்பு.” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சரியாக வீடியோவின் 1:௦5 நிமிடங்களில் மல்லிகார்ஜுன கார்கேயின் நெற்றியில் உள்ள சிவப்பு நிற திலகத்தை, அவருடைய உதவியாளர் துடைப்பதைக் காண முடிந்தது.

மேலும் அவரின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தபோது, செய்தியாளர் சந்திப்பு நடந்த அதே நாளில் (ஏப்ரல் 26, 2023) சிக்கோடி மற்றும் ஹூப்ளி-தர்வாட் மேற்கு ஆகிய பகுதிகளுக்கும் அவர் பிரச்சாரத்திக்கு சென்றுள்ளார் என்பதை அறிய முடிந்தது. இவ்விரு இடங்களுமே இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முஸ்லீம் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்வதற்காகவே அவர் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்தார் என்பவை தவறான தகவல்கள்.

tv9kannada என்ற ஊடகமும் கடந்த ஏப்ரல் 26 அன்று இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூப்ளிக்கு புதன்கிழமை வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆரத்தி மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர் சந்திப்பிற்கு கார்கே வந்தார். செய்தியாளர் சந்திப்பு தொடங்கும் முன், கார்கேவின் மெய்க்காப்பாளர் அவர் நெற்றியில் உள்ள திலகத்தைத் துடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெகதீஷ் ஷெட்டரும் கலந்து கொண்டார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அவருடைய உதவியாளர் செய்தியாளர் சந்திப்பிற்காகவே இவ்வாறு செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: நெற்றியில் உள்ள குங்குமத்தை கார்கே துடைத்தால் இந்துமத வெறுப்பு.. இதையே அமித்ஷா, பாஜக முதல்வர்கள் செய்தால் ?

இதற்கு முன்பும் மல்லிகார்ஜுன கார்கேவைப் போன்றே, அமித்ஷா, கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல பாஜக தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் மேடையில் பேசும் போது தங்கள் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்திருப்பது குறித்து நம் பக்கத்தில் விரிவாக கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு :

நம் தேடலில், முஸ்லீம் பகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன் மல்லிகார்ஜுன கார்கே நெற்றியில் உள்ள திலகத்தை அழித்துக்கொள்கிறார் எனப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், இது கடந்த ஏப்ரலில் கர்நாடகாவின் ஹூப்ளியில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அவருடைய உதவியாளர் திலகத்தை துடைத்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader