மேற்கு வங்கத்தில் அமைச்சரின் டிரைவர் வீட்டில் எடுக்கப்பட்ட பண பீரோவா ?
பரவிய செய்தி
மம்தா பேகம் அடங்கிப் போவதன் மர்மம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இது ஒரு மந்திரியோட கார் டிரைவர் வீட்டுல பீரோ ! டிரைவர் வீட்டு பீரோவே இப்படினா அப்போ ஓனர்???
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் அமைச்சர் ஒருவரின் டிரைவர் வீட்டு பீரோவில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. இதனால் தான் மம்தா கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வருகிறார் என வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்ததில், Raids on Hetero Pharma: I-T Dept says Rs 550 cr unaccounted income detected எனும் தலைப்பில் 2021 அக்டோபர் 10ம் தேதி தி நியூஸ்மினிட் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்ரோ மருந்து நிறுவனத்துக்கு சொந்தமான 6 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத 550 கோடியில் 142 கோடி ரூபாய் பணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என CBDT தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு செய்திகள் மற்றும் இணையத்தில் வைரலாகியது.
மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையால் ஏதும் சோதனை நடத்தப்பட்டதா எனத் தேடுகையில், 2022 ஜூலை 22 அன்று மேற்கு வங்கத்தின் பள்ளிக்கல்வித் துறையில் வேலைக்கு ஆள் சேர்ப்பதில் ஊழல் நடப்பதாக அமலாக்கத் துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/i4dP2SAeGG
— ED (@dir_ed) July 22, 2022
இது தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சருக்கு நெருக்கமானவரின் குடியிருப்பு பகுதியில் 20கோடி கைப்பற்றப்பட்ட பணத்தை தனது ட்விட்டர் கணக்கில் அமலாக்கத் துறை புகைப்படங்களுடன் பதிவிட்டு இருக்கிறது. ஆனால், இதுவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படமும் வெவ்வேறு சம்பவங்களைச் சேர்ந்தது.
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்க அமைச்சரின் டிரைவர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம் எடுக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம், 2021 ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்ரோ மருந்து நிறுவனத்தில் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவரின் வீட்டில் இருந்து 20 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியது என அறிய முடிகிறது.