இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே’ என்று மன்மோகன்சிங் கூறியதாக பொய் பரப்பும் பிரதமர் மோடி !

பரவிய செய்தி

“வளர்ச்சியின் பயன்கள் சிறுபான்மையினருக்கு , குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு சென்றடைய வேண்டுமென்றால், பல புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு தான்” என்று டிசம்பர் 6, 2006 ஆம் ஆண்டு, சனிக்கிழமையன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியதை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சுட்டிக்காட்டியதை, ‘அய்யய்யோ’, மதவாதம் பேசுகிறார் பிரதமர் மோடி என்று கதறுகிறார்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் சில ஊடகவியலாளர்கள்..

X Link:

மதிப்பீடு

விளக்கம்

ஏப்ரல் 21 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றால் இந்துக்கள் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் பேசியிருப்பது, இந்தியா முழுவதுமே சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?” என்றும் பேசியுள்ளார்.

“சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது” என்று இதற்கு முன்பாகவும் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மக்களவை தேர்தலுக்கு பத்தாண்டு கால சாதனைகளை கூறி மக்களிடம் வாக்கு கேட்காமல், மக்களை எப்போதும் இஸ்லாம் மதத்தினருக்கு எதிராகவும், மதரீதியில் பேசியும், வெறுப்புணர்வை தூண்டுவதாகவுமே பிரதமர் மோடி பேசி வருகிறார். இதற்கு முன்பு இந்தியாவில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்று எதிர்கட்சியினர் பலரும் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், “இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டிசம்பர் 6, 2006 அன்று கூறியுள்ளார்”. இதனை சுட்டிக்காட்டி தான் பிரதமர் மோடி தற்போது பேசியுள்ளதாகக் கூறி பாஜகவினர் பலரும், மன்மோகன் சிங் பேசியுள்ள வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

மன்மோகன் சிங் பேசியுள்ள வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து ““வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்” பற்றிய பிரதமரின் விளக்கம்” என்ற தலைப்பில் Archivepmo.nic.in என்ற தளத்தில் டிசம்பர் 10, 2006 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சை சில மின்னணு ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டி ஆதாரமற்ற சர்ச்சையை கிளப்பியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பரவி வரும் செய்திகள் குறித்து அதில், “எங்கள் கூட்டு முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன: விவசாயம், நீர்ப்பாசனம், நீர்வளங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடுகள், பொது உள்கட்டமைப்பின் அத்தியாவசிய பொது முதலீட்டுத் தேவைகள், SC/ST மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை அதில் உள்ளன.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலனில் சமமாக பங்கிடுவதை உறுதி செய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமைகோரலை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை ஒட்டுமொத்த வளங்களின் இருப்பு நிலைக்குள் பொருத்துவதற்கான எண்ணற்ற பிற பொறுப்புகளும் ஒன்றிய அரசிற்கு உள்ளன” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் மன்மோகன் சிங், 2006 இல் இது குறித்து பேசியுள்ள முழு வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், Mojo Story என்ற யூடியூப் பக்கத்தில் இது குறித்தான வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

அதில், பட்டியல் பிரிவினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே முதல் முன்னுரிமை என்று அவர் பேசியிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.

ஆனால் அவர் வீடியோவில் “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலனில் சமமாக பங்கிடுவதை உறுதி செய்ய புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமைகோரலை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்று பேசியுள்ள வீடியோவின் இறுதிப் பகுதியை மட்டும் எடிட் செய்து, அவர் முஸ்லீம்களுக்கு ஆதாரவாக மட்டும் பேசியுள்ளது போன்று சிலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். இது இஸ்லாம் மதத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் வெறுப்புணர்வையே தெளிவாகக் காட்டுகிறது.

மேலும் படிக்க: மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் சொல்லாத சோனியா காந்திக்கு மோடி வணக்கம் சொல்லவில்லை எனப் பரவும் இரண்டு பொய்கள் !

மேலும் படிக்க: 10 ஆண்டு ஆட்சியில் மன்மோகன் சிங் காஷ்மீர் சென்றதில்லை என வலதுசாரி ஆதரவாளர் விவாத நிகழ்ச்சியில் பேசிய பொய் !

முடிவு:

நம் தேடலில், இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே என்று மன்மோகன்சிங் கூறியதாக பாஜகவினர் பரப்பும் செய்திகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader