This article is from May 08, 2019

மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தமிழகம் முதலிடம் !

பரவிய செய்தி

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் பொழுது நிகழும் உயிரிழப்பு சம்பவங்களில் தமிழகமே முதலிடம். தமிழ்நாட்டில் 194 உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

துப்புரவாளர்களின் மரணங்கள் குறித்த ப்ளூம்பெர்க்குயின்ட் பதிவில் 1993-2018 வரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளன. தற்போது 2013-2018 வரையிலான மனித கழிவுகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் எண்ணைக்கையிலும் தமிழகமே முதலிடம்.

விளக்கம்

உலகம் நவீனமானது, மக்கள் நவீன வாழ்க்கையை நோக்கி நகர்கின்றன. எனினும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களே பயன்படுத்தும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தாமல் இருப்பதனால் மனிதர்களை கொண்டு மனித கழிவுகளை சுத்தம் செய்ய சொல்கிறோம்.

இத்தகைய பணியில் உயிர்க்கு ஆபத்தான சூழல் இருப்பதை உணர்ந்தாலும் வாழ்க்கையை நடத்துவதற்காக வேறு வழியின்றி இப்பணியில் இறங்குகின்றனர். அப்படி மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பொழுது மரணங்களும் கூட நிகழ வாய்ப்புள்ளது.


இந்திய அளவில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பொழுது இறந்தவர்களின் எண்னிக்கை 6371. இது1993-2018 வரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை. இதில் தமிழகத்தில் மட்டும் 194 பேர் என ப்ளூம்பெர்க்குயின்ட் ட்விட்டரில் செப்டம்பர் 2018-ல் பதிவிட்டு இருந்தனர். இந்திய அளவில் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலார்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து இருப்பது அதிர்ச்சியையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தகவல் :

இதைத் தவிர, நாடாளுமன்றத்தில் கேரளாவின் காங்கிரஸ் எம்பி முல்லபாலி ராமச்சந்திரன், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலார்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார்.

அதற்கு ஸ்டேட் ஃபார் சோசியல் ஜஸ்டிஸ் அண்ட் எம்பவர்மெட்-ன் யூனியன் அமைச்சர் ராம்தாஸ் அதவாலே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தகவலை அளித்து இருந்தார். அதில், தமிழகம் 144 மரணங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே காலக்கட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் 77 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இரு மடங்கு வித்தியாசம்.

பொருளாதாரம், கல்வி, வளர்ச்சி என பல துறைகளில் முன்னோடியான உள்ள தமிழகம் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது கரும்புள்ளியாக இருக்கிறது. மேலும், இப்பணியில் இருப்பவர்களின் முழுமையான எண்ணிக்கை தெரியாமல் இருக்கிறது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மட்டும் இப்பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரங்களை தாண்டுகிறது.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணியில் பெறும் தொகை குறைவானது. ஏனெனில், செப்டிக் டங் உள்ளிட்டவையை சுத்தம் செய்வதற்கு லாரிக்கான கட்டணம் ரூ.5000 வரை இருக்கிறது. இதே, மனிதர்களை கொண்டு சுத்தம் செய்ய 1000-1500 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆகையால் தான், மக்கள் செலவைக் குறைக்க மனிதர்களை கொண்டு வேலையை முடிக்கின்றனர்.

தனிப்பட்ட முறையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுகளை சுத்தம் செய்பவர்களும் இங்குள்ளன. இப்பணியில் இருப்பவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய வேண்டும் என்றால், அவர்களே தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.

மாற்றுவழி : 

மனித கழிவுகளை மனிதர்களுக்கு பதிலாக மாற்று வழியில் ரோபோக்கள் கொண்டு சுத்தம் செய்யும் நடைமுறை பற்றி முன்பே கட்டுரை எழுதி இருந்தோம். கேரளாவில் அதற்கான முயற்சியை தொடங்கி இருந்தனர். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் நகராட்சி பணிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை ஜூன் 2018 ஆம் ஆண்டில் தொடங்கினர்.

செப்டிக் டங், பாதாள சாக்கடையில் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் புகைப்படங்களை கருணை பதிவிற்காக பயன்படுத்துகிறோம். ஆனால், இங்கு அவர்களுக்கு தேவையானது எல்லாம் முறையான தொழில்நுட்பமும், சரியான வழிநடத்தலுமே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader