மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறி அயோத்தியில் பூமி பூஜையா ?
பரவிய செய்தி
மார்ச் 22 ராமர் கோவில் கட்ட தானே ஊரடங்கு உத்தரவு.. மாலை 5 மணிக்கு கைத்தட்ட சொன்னது பூமி பூஜை சிறப்பாக நடத்துவதற்காக. 22ம் தேதி ராமர் கோவில் பூமி பூஜை நடந்த பிறகு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சியாக கை தட்டி வரவேற்கும் சூழலை மோடி கச்சிதமாக முடித்து விட்டார்!
மதிப்பீடு
விளக்கம்
மார்ச் 22-ம் தேதி இந்திய முழுவதும் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, மக்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் ஊரடங்கு நிலையை கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு நிலையை மார்ச் 23-ம் தேதி காலை 5 மணி வரை நீட்டித்து உள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 22-ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் ராமர் கோவில் கட்டுவதற்கான பூஜையை தொடங்கி வைக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஓர் தகவல் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மார்ச் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார்களா எனத் தேடுகையில் அவ்வாறான எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. அயோத்தியில் பூமி பூஜை நடப்பதாக செய்திகளோ, அதிகாரப்பூர்வ தகவல்களோ ஏதும் இல்லை.
மார்ச் 21-ம் தேதி இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ” Covid-19: No Navratri festival in Ayodhya, Ram Navmi mela scrapped ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், அயோத்தியில் நடக்க உள்ள ராம நவமி நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
” கொரோனா வைரஸ் பரவல் குறித்து சரிபார்க்க மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடியின் ” ஜனதா ஊரடங்கு உத்தரவு ” வேண்டுகோளை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ராம்ஜன்மபூமியில் நடைபெறும் சிறப்பு பூஜை விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விழா மார்ச் 23-ம் தேதி தொடங்கும். நவராத்திரியின் முதல் நாளான மார்ச் 25-ம் தேதி ராம் ஜன்ம பூமியில் உள்ள தற்காலிக கோவிலில் இருந்து ராமரின் சிலை கோவிலுக்குள் மாற்றப்படுவதற்கு முன்பு சிறப்பு பூஜை செய்யப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
” கொரோனா வைரஸ் காரணமாக நவராத்திரி அன்று அயோத்தியாவிற்கு மக்கள் யாரும் வர வேண்டாம். திருவிழாவை அந்தந்த வீடுகளிலேயே முழு பண்டிகை கொண்டாட்டத்துடன் கொண்ட வேண்டும் என ” கோவில் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
2020 ஜனவரி மாதம் வெளியான செய்தியில் மார்ச் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என வெளியாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்தே தவறான தகவல்களை பரப்பி உள்ளனர்.
மார்ச் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை தொடங்கவே ஊரடங்கு உத்தரவு வெளியிட்டதாக பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கும் வேளையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.