சிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலைகள் குப்பையில் கிடக்கிறதா ?|உண்மை என்ன ?
பரவிய செய்தி
சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருதுபாண்டியர்கள் சிலையின் நிலை. தாயக விடுதலைக்காக போராடி உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு தமிழக தொல்லியல் துறை தரும் மரியாதை இதுதானா ? மருது அரசர்கள் ஆண்ட சிவகங்கை சீமையிலே குப்பையில் கிடத்தப்பட்டிருக்கும் அவலம், இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
வெள்ளையனுக்கு எதிராக வீரத்துடன் போராடிய மருது சகோதரர்களின் வெண்கல சிலைகள் குப்பையில் கிடப்பதாக இரு சிலைகளின் புகைப்படங்கள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் பதிவிட்டு வருகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருதுபாண்டியர்கள் சிலையின் நிலை.
தாயக விடுதலைக்காக போராடி உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு தமிழக தொல்லியல் துறை தரும் மரியாதை இதுதானா ???
மருது அரசர்கள் ஆன்ட சிவகங்கைசீமையிலே குப்பையில் கிடத்தப்பட்டிருக்கும் அவலம் இதை வண்மையாக கண்டிக்கின்றோம் .
1/3 pic.twitter.com/FN8k0Jgt9e— ராமு சீனிவாசன் (@ramu_seenivasan) November 18, 2019
உண்மை என்ன ?
இது குறித்து விசாரித்த பொழுது, மருது சகோதரர்களின் வெண்கல சிலைகள் குப்பையில் கிடப்பதாக பரவும் தகவல் தவறானது என அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், இந்த புகைப்படங்கள் கடந்த ஆண்டிலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.
” புகைப்படத்தில் இருப்பவை சிலைகள் அல்ல , திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை செய்யப் பயன்படுத்திய அச்சுகளே இவை. சிலைகள் செய்யப் பயன்படுத்திய அச்சுகள் சேதமடைந்து நிலையில் அவற்றை அருங்காட்சியகத்தின் வெளியே வைத்து இருந்ததாகவும், அதன் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் வரை தகவல் சென்ற காரணத்தினால் அருங்காட்சியகம் தரப்பில் செய்திகளுக்கு விளக்கம் அளித்து இருந்தனர். அதன் பிறகு சேதமடைந்த அச்சுகளை உள்ளே எடுத்து வைத்துள்ளதாக ” சிவகங்கை அரசு அலுவகத்தில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் நமக்கு தெரிவித்து உள்ளார்.
சிவகங்கையில் மருது பாண்டியர்களுக்கு வெண்கல சிலைகள் இல்லை என்கின்றனர். புகைப்படத்தில் இருப்பவை திருப்பத்தூரில் வைத்த சிலைகளை செய்ய பயன்படுத்திய அச்சுகளே இவை. அச்சுகளாக இருந்தாலும் , அவற்றை முறையாக வைத்திருக்கவோ அல்லது அப்புறப்படுத்தாமல் இருந்ததால் தவறான செய்திகள் பரவி உள்ளன.
எனவே, உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் இருக்கும் விசயங்களில் தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.