மருது சகோதரர்கள் பற்றி Ph.D. ஆய்வறிக்கைகள் வந்ததில்லை என ஆளுநர் ரவி சொன்ன பொய் !
பரவிய செய்தி
மருது பாண்டிய சகோதரர்கள் பற்றி study இருக்கிறது. ஆனால், அவர்களைப் பற்றி ஒரு Ph.D. ஆய்வறிக்கை கூட இல்லை. – ஆளுநர் R.N.ரவி
மதிப்பீடு
விளக்கம்
தனியார் IAS பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா திருச்சியில் நேற்றைய தினம் (2023, அக்.23ம் தேதி) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது ‘மருது பாண்டி சகோதரர்கள் பற்றி சுயமாக ஆய்வுகள் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு முனைவர் பட்ட (PhD) ஆய்வாளர் கூட அவர்களின் சுதந்திரப் போராட்டம் குறித்து ஆய்வு செய்யவில்லை’ எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசிய முழுமையான வீடியோ நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் (1:23:15) ‘மருது சகோதரர்கள் பற்றிய முனைவர் ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை’ என ஆளுநர் பேசிய பகுதியும் இடம்பெற்றுள்ளது. ஆனால், மருது சகோதரர்கள் குறித்துப் பல ஆய்வுகளைக் காண முடிகிறது. மேலும் Ph.D. ஆய்வறிக்கையையும் காண முடிந்தது.
முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வறிக்கையினை ‘Shodhganga’ என்னும் தளத்தில் பதிவிடுவர். இதனை யார் வேண்டுமானாலும் படிக்கவோ பயன்படுத்திக் கொள்ளவோ முடியும். அத்தளத்தில் “தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் மருது சகோதரரின் பங்கு – ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலும் ஆய்வறிக்கை உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்பவர் இந்த ஆய்வினை செய்துள்ளார். மேற்கொண்டு வேறு எந்த Ph.D. ஆய்வறிக்கைகளும் இணையத்தில் கிடைக்கவில்லை. அனைத்து முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளும் இணையத்தில் பதிவேற்றப்படுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மருது சகோதரர்கள் பற்றி வேறு சில ஆய்வுகளையும் காண முடிகிறது.
எனவே மருது சகோதரர்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வே செய்யப்படவில்லை என ஆளுநர் பேசியது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !
ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு முன்னர் பேசிய பொய்களும், அது பற்றிய உண்மைகளும் யூடர்னினால் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மருது சகோதரர்கள் பற்றி ஒரு முனைவர் பட்ட ஆய்வு கூடச் செய்யப்படவில்லை என ஆளுநர் கூறிய தகவல் உண்மை அல்ல. அவர்கள் பற்றிய ஆய்வுகளும், முனைவர் பட்ட ஆய்வுகளும் வெளிவந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.