மீன்களை சுத்தம் செய்து மகளை மருத்துவராக்கிய தாய்.. நீட் காரணமென வதந்தி !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த தாயின் செயலானது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
மே 31-ம் தேதி திருவாரூர் பகுதிக்கு முதல்வர் சென்ற போது, மீன்களை கழுவி சுத்தம் செய்து தனது மகளை மருத்துவராக்கிய திருமதி ரமணி, அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோரை சந்தித்தார்.
நீட்டுக்கு எதிராக நிப்பான் ஒரு ஏழை வீட்டு பிள்ளை நீட் எழுதி பாஸ் பண்ணினாள் அதே மானங்கெட்ட பய போய் வாழ்த்துக்கள் சொல்லுவான் அவன் யார்
— 🇮🇳 கட்டெறும்பு 🚩 (@katterumpu) May 31, 2022
முதல்வர் சந்திப்பு குறித்த செய்திக்கு கீழே, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு ஏழை பெண் நீட் தேர்வில் பாஸ் செய்தால் வாழ்த்துவதாக கட்டெறும்பு எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கமெண்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
” மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியை செய்து வரும் ரமணியின் மகள் 12-ம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவம் படிக்க ஆசை இருந்தாலும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் படிப்பில் சேர்ந்துள்ளார்.
ஆனாலும், மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று ரஷ்யாவில் மகளை மருத்துவம் படிக்க வைத்துள்ளார். அதன் விளைவாக ரஷ்யாவில் மருத்துவம் படித்து விஜயலட்சுமி நாடு திரும்பியுள்ளார் ” என செய்திகளில் வெளியாகி இருக்கிறது
மேலும், தாய் ரமணி மற்றும் மருத்துவர் விஜயலட்சுமி அளித்த பேட்டி ஒன்றிலும், ரஷ்யாவில் மருத்துவம் படித்ததாக விஜயலட்சுமியும் தெரிவித்து இருக்கிறார். ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த விஜயலட்சுமி இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்வதற்காக ஜூன் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத படித்து வருகிறார்.
முடிவு :
நம் தேடலில், மயிலாடுதுறையில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் தாய் தன் மகள் விஜயலட்சுமியை மருத்துவராக்கியது நீட் தேர்வால் அல்ல, அவரை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்துள்ளார் என அறிய முடிகிறது.