பழனிச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் என மயில்சாமி கூறினாரா ?

பரவிய செய்தி

கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி – நடிகர் மயில்சாமி

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி சட்டப்பேரவை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், ” கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ” என மயில்சாமி கூறியதாக ABP நாடு உடைய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ABP நாடு செய்தி சேனலின் முகநூல் பக்கத்தை தேடிப் பார்க்கையில், மயில்சாமி குறித்த நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து ABP நாடு சேனலின் ஆசிரியர் மனோஜ் அவர்களிடம் பேசுகையில், ” இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

ABP நாடு முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 22-ம் தேதி, ”  விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும் – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ” என வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து போலிச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button