மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தாக்கியதாக பரவும் இரு வீடியோக்கள் !

பரவிய செய்தி
திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனியில் அன்பின் சிகரம் என்ற பெயரில் இயங்கி வரும் மனநலம் குன்றியோர் காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தாக்கும் காட்சிகள்.
மதிப்பீடு
சுருக்கம்
அன்பின் சிகரம் காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒருவரை தாக்கியதாக பரவும் செய்தி உண்மையே. மேலும், அது திருநெல்வேலி அல்ல.
அதில், சிறுவனை ஒருவர் அறையில் வைத்து அடிக்கும் வீடியோ காட்சிகள் காப்பகத்தை சேர்ந்தவை அல்ல. அந்த வீடியோ காட்சி ஓராண்டிற்கு முன்பு பெங்களூரில் நிகழ்ந்த சம்பவமாகும்.
விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ காலனியில் இயங்கி வரும் ” அன்பின் சிகரம் ” எனும் மனநலம் குன்றியோர் காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த காப்பகத்தின் உரிமையாளரான கிருஷ்ணமணி காப்பகத்தில் இருந்த மனவளர்ச்சி குன்றிய 21 வயதான இளைஞரை கன்னத்தில் அறைவது, பிரம்பால் ஆவேசத்துடன் அடிப்பது, கீழே விழுந்தவரை காலால் மிதிப்பதும் என 1 நிமிடத்திற்கு மேலே ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கண்டனங்களைப் பெற்றது.
இதன் பிறகு, குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் நடத்திய விசாரணையில், தாக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய இளைஞர் தன்னை உணராமல் காப்பகத்தில் நடமாடியதால் ஆத்திரத்தில் உரிமையாளர் கிருஷ்ணமணி இவ்வாறு தாக்கியுள்ளார் . ஆதாரங்கள் அவருக்கு எதிராக இருந்த காரணத்தினால் நடந்ததை ஒப்புக் கொண்டார்.
பின்னர் கிருஷ்ணமணி மீது சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளை பெற்றோர்கள் அழைத்து சென்ற பிறகு காப்பகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்..
தவறான வீடியோ :
” அன்பின் சிகரம் ” காப்பகத்தில் சிறுவன் தாக்கப்படுவதாக மற்றொரு வீடியோ பதிவும் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அவை தவறான வீடியோ என்பதை தெளிவுப்படுத்த வேண்டி உள்ளது. அது சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு வீட்டில் நிகழ்ந்த சம்பவமாகும்.
2017-ல் நவம்பர் 17-ம் தேதி மேற்கு பெங்களூரில் வசித்து வந்த 37 வயதான மகேந்திர குமார் என்பவர் 10 வயதான மகனை மொபைல் சார்ஜர் கொண்டும், பெல்ட் கொண்டும் கடுமையாக தாக்கிய பிறகு பெட்டில் பலமுறை கொடூரமாக தூக்கி வீசியுள்ளார். இந்த வீடியோவை எடுத்தது அவரது மனைவி ஆவார்.
மகேந்திரன் தன் மொபைலை சரி செய்ய கடையில் கொடுத்திருந்த பொழுது அதில் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. இதன் விளைவாக, தாக்கப்பட்ட சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.
2017 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோ தவறுதலாக ” அன்பின் சிகரம் ” காப்பகத்தில் நடந்தது என்று பகிரப்பட்டு வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.