எம்.ஜி.ஆர் தியானம் செய்வது அண்ணா நினைவிடமா ?
பரவிய செய்தி
1972 ஆம் ஆண்டில் அண்ணா நினைவிடத்தில் தியானம் செய்யும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தியானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தவரே இவர் தான் என்று இப்பொழுது தெரிகிறதா.
மதிப்பீடு
சுருக்கம்
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் எம்.ஜி.ஆர் அவர்கள் மௌன அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம் தான் இது.
விளக்கம்
அண்ணா நினைவிடத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தியானம் செய்வதாக கூறியும், நினைவிடத்தில் தியானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தவரே எம்.ஜி.ஆர் தான் என்ற வாசகத்தையும் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
கடந்தாண்டில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது கட்சியில் பல குழப்பங்கள் நடைபெற்றன. ஜெயலலிதாவிற்கு அடுத்து திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவிக் காலம் சில மாதங்கள் கூட நீடிக்க முடியவில்லை. காரணம், திருமதி.சசிகலா அவர்கள் சட்ட மன்ற குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து திரு.ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்ட பிறகு ஊடகங்களை சந்தித்து பேசினார்.
சிறிது நாட்களுக்கு பிறகு திருமதி.சசிகலா அவர்கள் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தி சபதம் எடுத்தார். இவர்களுக்கு பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க வை சேர்ந்த பலர் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தனர்.
ஆகையால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடமானது தியானம் செய்யும் இடமாக மாறியது. இவ்வாறு இருக்கையில், 1972 ஆம் ஆண்டில் அண்ணா நினைவிடத்தில் எம்.ஜி.ஆர் தியானம் செய்ததாகவும், தியானம் செய்யும் வழக்கத்தை எம்.ஜி.ஆர் தான் கொண்டு வந்தார் என்றும் படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
அண்ணா நினைவிடத்தில் கட்டிடங்கள் ஏதும் கிடையாது.ஆனால், அப்படத்தில் உள்ள நினைவிடத்தை சுற்றி கட்டிடங்களாக தெரியும். இந்த படமானது எம்.ஜி.ஆர் அவர்கள் 1966 களில் ‘அன்பே வா’ படப்பிடிப்பிற்காக டெல்லி சென்ற போது, அங்கேயுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அமர்ந்து மௌன அஞ்சலி செலுத்திய போது எடுத்தப் படம் என்று இதயக்கனி ஆசிரியர் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே உண்மைக்கு புறம்பான செய்திகள் பலவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி சிலர் ஆதாயம் தேடப் பார்கிறார்கள்.