சென்னையில் 2015-ல் தான் அதிக மழை பெய்தது என தவறான தகவலைப் பரப்பும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் !

பரவிய செய்தி

சென்னை வானிலை மையம் ஒரு தரவை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பருவமழை அக்டோபர் 01, 2023 முதல் டிசம்பர் 04, 2023 வரையிலான காலக்கட்டத்தில் நார்மலாக பெய்தது என்றால் 69 செ.மீ. பெய்யும். ஆனால் தற்போது பெய்தது 89 செ.மீ. மழை. அதே நேரத்தில்  டிசம்பர் 01, 2023 முதல் டிசம்பர் 04, 2023  வரையிலான, நான்கு நாட்களுக்கு பெய்த மழையின் அளவு 58 செ.மீ. 

அதுவே  2015 ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், 2015 நவம்பர் மாதம் மட்டுமே 104 செ.மீ. மழை பெய்துள்ளது. டிசம்பர் 01, 2015 காலை 8.30 மணியிலிருந்து  டிசம்பர் 02, 2015 காலை 8.30 மணி வரை, ஒரு நாளில் மட்டும் பெய்தது 48 செ.மீ. மழை. எனவே எந்த விதத்திலும் இந்த மழையை, 2015 மழையோடு ஒப்பீடு செய்யவே முடியாது. 2015-ல் தான் அதிக மழை பெய்துள்ளது.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. இந்நிலையில் சென்னையில் தற்போது பெய்துள்ள மழை, கடந்த 2015-ல் பெய்துள்ள மழையை விட குறைவு தான். எனவே 2015 மழையோடு தற்போதைய மழையை ஒப்பீடு செய்வதே தவறு என்று கூறியுள்ள ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் முழு வீடியோ நேற்று (டிசம்பர் 07) 4th Estate Tamil என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்ததை அறிய முடிந்தது.

இந்த வீடியோவில் பெலிக்ஸ் பேசியுள்ள தகவல்கள் குறித்து ஆய்வு செய்த போது, 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பெய்த மழையின் அளவு குறித்து நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள கட்டுரையைக் காண முடிந்தது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2023 டிசம்பர் 4 -ம் தேதி நுங்கம்பாக்கம் – 24 செ.மீ, மீனம்பாக்கம் – 19 செ.மீ, தாம்பரம் – 24 செ.மீ மற்றும் செம்பரம்பாக்கம் – 21 செ.மீ மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதிகளில் 2015, டிசம்பர் 1ம் தேதி முறையே 29 செ.மீ, 35 செ.மீ, 49 செ.மீ, 47 செ.மீ மழை பொழிந்துள்ளது.

இந்த 24 மணி நேர மழைபொழிவிற்கான தரவுகளை ஆய்வு செய்து பார்க்கையில் 2015-ம் ஆண்டில் தான் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக, பெலிக்ஸ் கூறியபடி தாம்பரத்தில் அதிகபட்சமாக 49 செ.மீ. வரை மழை பெய்துள்ளதை News Minute கட்டுரையிலும் காண முடிந்தது.

மேலும் இது தொடர்பாக ‘Chennai Rains-COMK’ என்கிற பெயரில் வானிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கே.ஸ்ரீகாந்த் கூறிய கருத்தும் நியூஸ் மினிட் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் காலை 8.30 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரையில் பெய்யும் மழையின் அளவை ஒருநாள் மழையின் அளவாக கணக்கிடுகிறது. ஆனால், சமீபத்தில் டிசம்பர், 3ம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர், 4ம் தேதி இரவு 8.30 மணி வரையில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இது இந்திய வானியல் ஆய்வு மைய தரவின்படி இரண்டு நாட்களில் பெய்த மழையாக கணக்கிடப்படுகிறது. அதனால் 48 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை கணக்கிட்டால் மட்டுமே மிக்ஜாம் புரயலின் போது (டிசம்பர் 3-4, 4-5 தேதிகளில்) பெய்த முழு மழையின் அளவு தெரியவரும்.

அதன்படி நுங்கம்பாக்கம் 47 செ.மீ, மீனம்பாக்கம் 42 செ.மீ, தாம்பரம் 41 செ.மீ, செம்பரம்பாக்கம் 37 செ.மீ மழை பெய்ததாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி 48 மணி நேரத்தில் (டிசம்பர் 3-4, 4-5 தேதிகளில்) நுங்கம்பாக்கம் 47 செ.மீ, மீனம்பாக்கம் 42 செ.மீ, தாம்பரம் 41 செ.மீ, செம்பரம்பாக்கம் 37 செ.மீ மழை பெய்ததாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்திலும் இதே போல் 2015 மற்றும் 2023-இல் வெள்ளம் ஏற்பட்ட போது பெய்த மழையின் அளவை ஒப்பிட்டு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 2015 டிசம்பர் 1, 2 மற்றும் 3 தேதிகளிலும் 2023 டிசம்பர் 2, 3 மற்றும் 4 தேதிகளிலும் பெய்த மழையின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது.

அத்தேதிகளின்படி, 2015-ல் நுங்கம்பாக்கத்தில் 34 செ.மீ பழைய பதிவாகியுள்ளது. அதே பகுதியில் 2023-ல் 53 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 2015-ல் 44 செ.மீ, 2023-ல் 46 செ.மீ மழையும் பெய்துள்ளது. இதனைக் கொண்டு பார்க்கையில் 2023-ல் அதிக மழை பெய்துள்ளதை அறிய முடிகிறது. 

மேலும் இது குறித்து  ‘தமிழ்நாடு வெதர் மேன்’ என்னும் பெயரில் இயங்கக் கூடிய பிரதீப் ஜான் என்பவரும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் 2015 மற்றும் 2023 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவுகளை ஒப்பீடு செய்து தரவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தாம்பரம் (Upstream) மற்றும் செம்பரம்பாக்கம் (Upstream) ஆகிய இரண்டு இடங்களைத்தவிர பரவலாக 2023-லேயே அதிக மழை பெய்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் பரவி வரும் வீடியோவில் பேசியுள்ள பெலிக்ஸ், “எந்த நகரத்திற்கும் இல்லாத சிறப்பாக சென்னையில் நான்கு ஆறுகள் இருக்கின்றன. அவை கொசஸ்தலை ஆறு, கூவம், மற்றும் அடையாறு. இது போக பக்கிங்காம் கால்வாயும் இருக்கிறது. இந்த மூன்று ஆறுகளில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்படுவதால் அடையாற்றில் மட்டும் தண்ணீர் செல்கிறது.  மற்ற ஆறுகள் தண்ணீர் இல்லாமலே செல்கின்றன. ஆனால் நகருக்குள் தண்ணீர் இருக்கிறது. ஆறுகளுக்குள் தண்ணீர் விட்டிருந்தால், நகருக்குள் தண்ணீர் வடிந்திருக்கும்.” என்றும் கூறியுள்ளார். 

ஆனால் இது குறித்து ஆய்வு செய்ததில், “கடல் பரப்பிலிருந்து புயல் நகராமல் நிலை கொண்டு இருந்ததால் மட்டுமே கடல் சீற்றம் ஏற்பட்டு, அவை வெள்ள நீரை உள்ளே ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து தள்ளி வெள்ள நீர் நகருக்குள் திரும்பும் படி செய்துள்ளன. இல்லையேல் மழைநீர் வடிகால்கள் வழியாக கடலில் கலந்திருக்கும். மேலும் சென்னை 25 செ.மீ வரையிலான மழையைத் தாங்கக்கூடிய அளவே மழை நீர் வடிகால் வசதிகளைக் கொண்டுள்ளது. தற்போது பெய்துள்ளது அதீத கனமழை” என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதையும் காண முடிந்தது.

மேலும் சென்னையில் அடையாறு மட்டுமே நிரம்பி ஓடியது என்று பெலிக்ஸ் கூறியதும் தவறான தகவலே. அடையாறு போலவே சென்னையில் கூவம் ஆறு மற்றும் கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !

முடிவு : 

நம் தேடலில், பெலிக்ஸ் கூறியது போல 2023-ம் ஆண்டை காட்டிலும் 2015-ல் தான் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது எனப் பரவும் தகவல்கள் உண்மை அல்ல என்பதையும், தரவுகளை ஆய்வு செய்ததில், 2023-ஆம் ஆண்டில் தான் அதிக மழை பெய்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் : 

மேலும் கடந்த 2015-ல் செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திலிருந்து 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக பெலிக்ஸ் கூறியுள்ளதும் முற்றிலும் தவறான தகவலே.

கடந்த 2015 நவம்பர் 25 அன்று சென்னையில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கூட, கடந்த 2015 நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரையிலான நாட்களில் செம்பரமாக்கம் நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் டிசம்பர் 1-ம் தேதி சுமார் 48 செ.மீ அளவுக்கு கனமழை பெய்தவுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரமாக்கம் நீர்தேக்கத்திலிருந்து 12 மணி நேரத்தில் மட்டும் 29,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதே கடந்த 2015-ல் சென்னையில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்பதை கடந்த 2015ம் ஆண்டு The Hindu, The News Minute, Business Standard, The Wire ஆகிய ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader