முதலமைச்சர் பிறந்தநாள் விழாவிற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை எனப் பொய் பரப்பிய சவுக்கு சங்கர் !

பரவிய செய்தி

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை – சவுக்கு சங்கர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மார்ச் 1ம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜெஷ்வி யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரி கட்சிகள், வைகோ, கூட்டணியிலுள்ள மூத்த தலைவர்கள் மற்றும் வட தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் திருமாவளவன் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

நேற்றைய தினம் நடந்த கண்டன கூட்டத்தில் திருமாவளவன், தமிழ்நாடு காவல் துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா எனப் பேசியிருந்தார் இதனைத் தொடர்ந்துதான் அழைக்கவில்லை என்பது போல சவுக்கு சங்கர் அழைப்பிதழ் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ? 

சவுக்கு சங்கர் பதிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.திருமாவளவன் டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். மார்ச் 1ம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார். அப்படத்தில் முதல் வரிசையில் திருமாவளவன் அமர்ந்துள்ளதைக் காண முடிகிறது.  

Archive link 

அவருக்கு அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரும் அதே வரிசையில் அமர்ந்துள்ளதையும் காண முடிகிறது.

மேற்கொண்டு தேடியதில், மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்திலும் பிறந்தநாள் விழா புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ மற்றும் ஏனைய கூட்டணி தலைவர்கள் இருப்பதைக் காண முடிகிறது.  

Twitter link 

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருந்த பிறந்தநாள் விழா குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் வெளியான செய்தியிலும் ‘கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

Archive link 

சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள அழைப்பிதழிலும் வாழ்த்துக் கூறுபவர்கள் என்றுதான் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்ற முறையில் எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மாநில முன்னேற்றத்தைத் தடுக்க முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் டாக்டர்.திருமாவளவன், “தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் வீரமணி அவர்களது காரினை மறித்துக் கொண்டு வன்முறை செய்ய முயல்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது தமிழ்நாடு காவல் துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமே தவிர, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது. அதிமுக வேண்டுமானால் அமித்ஷாவின் கட்டுப்பாட்டிற்கு ஆடலாம், ஓடலாம்” எனப் பேசி இருந்தார்.

திருமாவளவன் இப்படிப் பேசியதை வைத்துக் கொண்டு, அவர் மு.க.ஸ்டாலினுடைய பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்ற ஒரு தவறான தகவலைச் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், கூட்டணி கட்சியினர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை சவுக்கு சங்கர் கூறியது உண்மை அல்ல. வைகோ, தொல்.திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் இதர கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader