மோடி தொடங்கி வைத்த ராணுவ தொழில் வழித்தடத்தில் அர்ஜுன் டேங்க் உருவாக்கப்பட்டதா ?
பரவிய செய்தி
2 ஆண்டுகள் முன்பு சென்னையில் பாதுகாப்பு வழித்தடத்தை மோடிஜி துவங்கி வைத்தது
அதன்மூலம் ஆயிரக் கணக்கானோருக்கு வேலை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்ட அர்ஜுன் Tank இன்று பிரதமரால் ராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
பிப்ரவரி 14-ம் தேதி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜுன் மார்க் 1ஏ ராணுவ டேங்கரை சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.
#MBT Arjun Mark 1A formally handed over to the Indian army by Hon’ble Prime Minister Shri @Narendramodi at Jawaharlal Nehru Indoor Stadium, Chennai. #TNWelcomesPMModi @PMOIndia @DefenceMinIndia @Def_PRO_Chennai @DRDO_India @adgpi @MIB_India @PIB_India @airnews_Chennai pic.twitter.com/9SFtWILLI6
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) February 14, 2021
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த அர்ஜுன் மார்க் 1ஏ டேங்கர் சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமரால் அறிவிக்கப்பட்ட ராணுவ தொழில் வழித்தடத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கி தயாரிக்கப்பட்டது என பாஜகவின் மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை மற்றவர்களும் பகிர்ந்து உள்ளனர்.
உண்மை என்ன ?
பிரதமர் மோடி அர்ப்பணித்த அர்ஜுன் மார்க் 1ஏ டேங்கர் சென்னையில் உருவாக்கப்பட்டது தான், ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரால் அறிவிக்கப்பட்ட தமிழகத்தின் ராணுவ தொழில் வழித்தடத்தில் அல்ல.
” இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(DRDO) ஒரு பிரிவான சென்னையைச் சேர்ந்த சிவிஆர்டிஇ (Combat Vehicles Research & Development Establishment) வடிவமைத்து மற்றும் உருவாக்கிய டேங்கின் மாதிரியை ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே பெற்றதாக ” தி ஹிந்து ஆங்கில செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” 8,400 கோடி ரூபாய் மதிப்பில் 118 அர்ஜுன் மார்க் 1ஏ டேங்குகளை இந்திய ராணுவத்தில் சேர்க்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த டேங்க்குகள் 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல எம்.எஸ்.எம்.இ-க்களுடன் இணைந்து சென்னையில் உள்ள டிஆர்டிஓ-வின் காம்பாட் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ளதாக ” டைம்ஸ் நவ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
டிஆர்டிஓ-வின் அதிகாரப்பூர்வ இனையதளத்தில் அர்ஜுன் டேங்க் உருவாக்கம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. மேலும், டிஆர்டிஓ-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், டிஆர்டிஓ மூலம் உருவாக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1ஏ ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hon’ble Prime Minister Shri Narendra Modi handed over DRDO developed Main Battle Tank Arjun Mk 1A to Chief of the Army Staff during a function held at Chennai today. #AatmaNirbharBharat @PMOIndia @narendramodi @adgpi @DefenceMinIndia pic.twitter.com/vqNbbi0H8M
— DRDO (@DRDO_India) February 14, 2021
சென்னையின் ஆவடியில் உள்ள டிஆர்டிஓவின் காம்பாட் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் வாகனங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவையின் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள டிஆர்டிஓவின் முக்கிய ஆய்வகமாகும்.
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தொழில் வழித்தடத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ராணுவ தளவாட உற்பத்திக்கான தளமாக விளங்கும் ” என அறிவித்து இருந்தார்.
எனினும், தற்போதுவரை தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ராணுவ தொழில் வழித்தடங்களில் உற்பத்திகள் தொடங்கப்படவில்லை. அதற்காக நிலம் பெறுவது உள்ளிட்ட பணிகளே சென்றுக் கொண்டிருக்கிறது என ஜனவரி 2021-ம் தேதி வரை வெளியான செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், ஹெச்.ராஜா பதிவிட்டது போல் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த பாதுகாப்பு வழித்தடத்தில் அர்ஜுன் டேங்க் உற்பத்தி செய்யப்படவில்லை. இது சென்னை ஆவடியில் உள்ள டிஆர்டிஓவின் சிவிஆர்டிஇ-ல் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ராணுவ தொழில் வழித்தடங்கள் இன்னும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது.