மேற்கு வங்கத்தில் மோடிக்கு எதிராக திருடன் என கோஷம் எழுந்ததா ?
பரவிய செய்தி
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் காலடி எடுத்து வைத்த உடனே சவுக்கிதார் சோர் ஹை (காவல்காரன் திருடன்) என்ற கோஷம் விண்ணை பிளந்தது.
மதிப்பீடு
விளக்கம்
ஆம்பன் புயலின் பாதிப்பை பார்வையிட மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பயணிக்க நடந்து செல்லும் பொழுது சவுக்கிதார் சோர் ஹை, சவுக்கிதார் சோர் ஹை என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்ததாக இந்திய அளவில் ஓர் வீடியோ வைரலாகி வருகிறது.
மே 22-ம் தேதி NO CAA எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இவ்வீடியோ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அதே வீடியோவை பிற முகநூல் பக்கங்கள், தனிநபர் கணக்குகளில் பதிவிட்டு மேலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி புயல் பாதிப்பை பார்வையிட சென்றதாக சமூக ஊடகங்கள், சில செய்தி இணையதளங்களில் கூட வெளியாகி இருந்தது. எனினும், பிரதமர் மோடிக்கு எதிராக காவலாளியே திருடன் என எழும் கோஷத்தை கேட்கும் பொழுது சந்தேகங்கள் இருந்ததால் அதனை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வீடியோவில் பிரதமர் மோடிக்கு எதிரான கோஷத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கும் பொழுது மம்தா பானர்ஜி, பாதுகாவலர்கள் என யாரும் கண்டுகொள்ளாதது போல் தெரிகிறது. இதைவிட, பிரதமருக்கு எதிராக போராட்டமோ அல்லது கோஷமோ ஏற்படுத்தி இருந்தால் இந்திய அளவில் அனைத்து செய்திகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஆக வெளியாகி இருக்கும். ஆனால், வைரலாகும் வீடியோ தொடர்பாக தேடிய பொழுது எந்தவொரு செய்தியிலும் அவ்வீடியோ வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவின் உண்மையான வீடியோ கொல்கத்தாவின் ஆல் இந்தியா ரேடியோவின் நியூஸ் பிரிவான ஆகாஷபானி சங்பாத் கொல்கத்தாவின் முகநூல் பக்கத்தில் மே 22-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில், சமூக வலைதளங்களில் வைரலாவது போன்று மோடிக்கு எதிரான கோஷங்கள் இடம்பெறவில்லை.
அதேபோல், பெங்கால் டைம்ஸ் 24*7 எனும் செய்தியின் முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணிக்க செல்லும் காட்சிகள் லைவ் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அதிலும், வைரல் செய்யப்படும் கோஷம் இடம்பெறவில்லை.
உண்மையான வீடியோவில், சில பேர் ” திதி ” மற்றும் ” ஜெய் ஸ்ரீராம்” என கூறுவதை கேட்கலாம். ஆக, உண்மையான வீடியோவில் ” சவுக்கிதார் சோர் ஹை ” என்ற கோஷங்களை எழுப்பும் ஆடியோவை மட்டும் இணைத்து உள்ளனர் என புரிந்து கொள்ள முடிகிறது.
சவுக்கிதார் சோர் ஹை கோஷம் தொடர்பாக தேடிய பொழுது, பெங்களூரில் பாஜக பேரணியின் போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் சவுக்கிதார் சோர் ஹை எனும் கோஷத்தை எழுப்பியதாக 2019 ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூர் மீடியா எனும் யூட்யூப் சேனலில் வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற ஆடியோவும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற ஆடியோவும் ஒன்றுபோல் உள்ளது.
மேலும் படிக்க : மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா ?
நமது தேடலில், மேற்கு வங்கத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக ” சவுக்கிதார் சோர் ஹை ” எனும் கோஷம் எழுப்பப்படவில்லை. வைரல் செய்யப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.