This article is from Apr 10, 2020

இந்தியாவின் 3 நிபந்தனைகளை ஏற்றதால் அமெரிக்காவிற்கு மருந்து வழங்கப்பட்டதா ?

பரவிய செய்தி

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.. அமெரிக்கா இந்தியாவிடம் அவசரமாக HYDROXYCHLORIQUNIE மருந்தை இறக்குமதி செய்து கேட்டது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா நம்மிடம் கையேந்தும் நிலையில் தான் உள்ளது என்பதே இந்தியாவுக்கு பெருமைதானே? அதற்கு பதிலாக மோடிஜியின் இந்திய அரசு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது.

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 4.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உதவும் என அமெரிக்க ட்ரம்ப் நம்புகிறார்.

ஆகையால், அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியாவிடம் ஆர்டர் செய்து இருந்தார். எனினும், மத்திய அரசின் தடையால் மாத்திரைகள் அமெரிக்காவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தடையை விலகும்படி ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்த பிறகும் மத்திய அரசு தடையை விலக்கவில்லை.

இந்நிலையில்தான், ” இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி இருக்கலாம்  ” எனத் தெரிவித்து இருந்தார்.

ட்ரம்ப் உடைய இத்தகைய பேச்சுக்கு பிறகு 24 மணி நேரத்திலேயே, மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் உடனடி முடிவு இந்திய செய்திகளில் விவாதமாய் மாறியது.

Facebook link | archive link 

ஆனால், இந்தியா அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை வழங்குவதற்கு முன்பாக 3 நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதை ஏற்றுக் கொண்ட பிறகே அமெரிக்காவிற்கு இந்தியா மாத்திரைகளை வழங்கியதாகவும் ஓர் தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

அமெரிக்காவின் மருந்து வியாபாரத்தில் இந்திய பார்மா நிறுவனங்களுக்கு நிபந்தனையின்றி அனுமதி, அமெரிக்காவின் எப்டிஏ கொண்டு வந்த இந்திய மருந்துகளின் மீதான தடையை நீக்க வேண்டும், இந்திய மருந்து கம்பெனிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்ற மூன்று நிபந்தனைகளை மத்திய அரசு முன்வைத்ததாக கூறுகிறார்கள். ஆனால், இவற்றுக்கெல்லாம் ஆதாரம் என எதுவுமில்லை. இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை அமெரிக்காவிற்கு மட்டும் அளிப்பதாக கூறவில்லை, தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க அனுமதி அளித்து உள்ளது.

இந்திய-அமெரிக்க இடையே மூன்று நிபந்தனைகளை கொண்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லை. இந்தியா 3 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவிடம் முன்வைத்ததாக அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது செய்திதகவல்களோ இல்லை.

ஒருவேளை இந்தியா 3 நிபந்தனைகளை முன்வைத்து இருந்தது உண்மையாக இருந்தால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதியில் விவாதத்திற்குள் சிக்கிய மத்திய அரசின் அதிதீவிர நடவடிக்கை என தேசிய அளவில் புகழாரங்கள் சூட்டப்பட்டு இருக்கும். ஆனால், எந்தவொரு ஆரவாரமும் இல்லை.

Twitter link | archive link 

மத்திய அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய பிறகு அதிபர் ட்ரம்ப் இந்திய மக்களுக்கும், மோடிக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்து இருந்தார்.

இந்தியா மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தேவைப்படும் நாடுகளுக்கு அளிப்பதாகவே அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர்த்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு ஆதாரங்கள் என ஏதுமில்லை. தவறான தகவல்களை பகிரவேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader