பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் பேனர் வைத்ததாக பரவும் தவறான தகவல் !
பரவிய செய்தி
மோடியின் தயார் மறைவிற்கு பேனர் அடித்த விழுப்புரம் திமுகவினர்
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நிலையில் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதிலும் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இப்படத்துடன் தமிழ்நாடு நவ் எனும் பக்கத்தில் வெளியான போஸ்டரை திமுகவினர் உள்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதை விமர்சித்து அதிமுகவினரும் பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு விழுப்புரத்தில் திமுகவினர் பேனர் வைத்ததாக செய்திகளோ, பதிவுகளோ ஏதும் கிடைக்கவில்லை.
கண்ணீர் அஞ்சலி பேனரில் ” திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி – விழுப்புரம் தெற்கு மாவட்டம் ” என இடம்பெற்று இருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் யாரும் இந்த பேனரை வைத்தார்களா எனத் தேடிய போது, ” விழுப்புர மாவட்ட பாஜகத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கலிவரதன் என்பவரின் முகநூல் பக்கத்தில் ” அதே பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருந்ததை பார்க்க முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பாஜகவினரால் வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனரின் கீழே ” திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி – விழுப்புரம் தெற்கு மாவட்டம்” என பாஜக கட்சி வண்ணத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதை தொலைவில் இருந்து பார்ப்பதற்கு திமுக கட்சியின் நிறத்தில் தெரிந்ததால், திமுகவினர் வைத்ததாக தவறாகப் பரப்பி உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், மோடியின் தயார் மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் பேனர் வைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் கண்ணீர் அஞ்சலி பேனர் ஆனது விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜகவினரால் வைக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.