கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா ?| உண்மை என்ன ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக மசூதி இடிக்கப்பட்ட போது இந்து கோவிலின் தூண்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாக இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் மசூதிக்குள் இந்துக் கோயில் இருந்ததா ?
2018 நவம்பரில் இதே நிலைத்தகவலுடன் வைரல் செய்யப்பட்ட மற்றொரு புகைப்படம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், ராய்ச்சூர் மசூதிக்குள் இருந்த தூண்கள் தொடர்பாக தகவல் வெளியிட்டு இருந்தோம். 2016-ம் ஆண்டில் இருந்தே ராய்ச்சூர் மசூதிக்குள் கோவிலின் தூண்கள் இருந்ததாக பரப்பி வருகிறார்கள்.
2016 ஏப்ரல் மாதம் கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரத்தில் இருந்தக் கடைகள், இந்துக் கோவில்கள் , இரண்டு மசூதிகள் வரை இடிக்கப்பட்டுள்ளன. இதில், எக் மினார் மஸ்ஜித் பாதியளவு இடிக்கப்பட்டுள்ளது.
” எக் மினார் மஸ்ஜித் பழமையான கட்டிடக்கலையில் கட்டப்பட்டு இருந்த காரணத்தினால் கற் தூண்கள் இடம்பெற்று உள்ளன. ஆகையால், உட்பகுதி பழமையான தூண்கள் உடனும், மேற்பகுதி வண்ணப்பூச்சுடன் காணப்பட்டு உள்ளது. ஆனால், எக் மினார் மசூதிக்குள் பழமையான கோவில் இருந்ததாக அரசியல், மதம் சார்ந்த வதந்திகள் பரவத் துவங்கின. 2016-ல் இருந்தே ராய்ச்சூர் மசூதியின் தூண்களின் புகைப்படங்கள் தவறாக வைரல் செய்யப்பட்டு வருகிறது ” .
வெறும் தூண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மசூதிக்குள் இந்து கோவில் இருந்ததாக ஏராளமான புகைப்படங்கள் பரப்பப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகளில் கூட தூண்களை வைத்து கட்டும் வழக்கம் இருந்துள்ளது. அப்போதைய கட்டிடக்கலைக்கு ஏற்ப கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதை தெரிந்தும் தெரியாமலும் தவறாக பகிர்கிறார்கள்.
மேலும் படிக்க : ஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா ?| ஃபேஸ்புக் பதிவு .
முடிவு :
நம்முடைய தேடலில், ராய்ச்சூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக மசூதி இடிக்கப்பட்ட போது இந்து கோவிலின் தூண்கள் இருந்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மசூதி இடிக்கப்பட்டது. இன்றுவரை அதன் புகைப்படங்கள் தவறான தகவலுடன் பரவி வருகிறது.