ம.பியில் பட்டினியால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட புகைப்படமா ?
பரவிய செய்தி
ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பட்டினி கொடுமையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்டது. இதுபோன்ற நேரங்களில் பசிபோக்க வேண்டியதுதான் அரசுகளின் கடமை கைத்தட்டு விளக்கேத்துன்னு வெட்டித்தனமான உத்தரவுபோட அல்ல… #கொடுமபன்னாதீங்க_மோடி_சார்
மதிப்பீடு
விளக்கம்
மார்ச் 24-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது நிதர்சனம். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பட்டினிக் கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக மேற்காணும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பட்டினியால் மூன்று குழந்தைகள் மற்றும் தாய் தற்கொலை செய்து கொண்டதாக முகநூலில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பட்டினியால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்ததா எனத் தேடுகையில் சமீபத்திய செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அப்படங்கள் 2019 ஜூன் மாதம் கன்னட மொழியில் வெளியான செய்தியில் அப்படங்கள் கிடைத்தன.
2019 ஜூன் மாதம் Thenews24 இணையதளத்தில் வெளியான தகவலில் இருந்து, ” கர்நாடகாவின் குகனூர் தாலுகாவில் உள்ள யரேஹஞ்சினாலா எனும் கிராமத்தில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தனது மூன்று குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ” என்பதை அறிய முடிந்தது.
இதேபோல், 2019 ஜூன் 18-ம் தேதி gbnewskannada எனும் மற்றொரு கன்னட இணையதளத்திலும் இப்புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 2019-ல் கர்நாடகாவில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் புகைப்படங்களை வைத்து மத்திய பிரதேசத்தில் ஊரடங்கின் போது பட்டினியால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.
மார்ச் 24-ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் டெல்லியில் இருந்து கூலித் தொழிலாளர்கள் பிழைப்பதற்கு வழியின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல துவங்கினர். மத்திய, மாநில அரசு வாகன வசதியை ஏற்படுத்தி தரவில்லை என நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொழிலாளர்கள் நடந்தே சென்றனர்.
மேலும் படிக்க : சூரத் தொழிலாளர் குடும்பம் பசியால் தூக்கிட்டு கொண்டதாக பரவும் தவறான புகைப்படம் !
அப்படி நடந்தே சென்றவர்களில் 22 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 5 பேர் குழந்தைகள். இதற்கு முன்பாக மார்ச் 27-ம் தேதி ஊரடங்கு நிலையால் பீகாரில் 11 வயது சிறுவன் பசியால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.