மோடிக்கு எதிராக டெல்லியில் கூடிய கூட்டம் எனப் பரவும் தவறான புகைப்படங்கள் !
பரவிய செய்தி
பரவிய செய்தி 1: மோடியின் பாசிச ஆட்சியை எதிர்த்து இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் திரண்ட மக்கள்.
பரவிய செய்தி 2: டெல்லியை அதிர வைத்த நமது ஆம் ஆத்மி கட்சியின் போர்படை
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் ஆகியோர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரமாண்ட கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், இடதுசாரித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தின் புகைப்படங்கள் என்று கூறி, மக்கள் பெருந்திரளாக இருப்பது போன்ற இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
மோடிக்கு எதிராக டெல்லியில் கூடிய மக்கள் pic.twitter.com/6lmsVC4YWD
— Madurai S Bala (@slbala) April 1, 2024
Surrounding area of Ramleela maidan#IndiaWithKejriwal#तानाशाही_हटाओ_लोकतंत्र_बचाओ pic.twitter.com/P2ICQ4tCGi
— Sanjeev Singh (@ssagar561) March 31, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் முதல் புகைப்படம் Peoples Democracy இணையதளப் பக்கத்தில், “மேற்கு வங்காளம்: படையணி செங்கடலாக மாறுகிறது, தேபாசிஷ் சக்ரவர்த்தி” என்று குறிப்பிடப்பட்டு கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது.
எனவே இது குறித்து மேலும் தேடியதில், CPI(M) WEST BENGAL என்ற எக்ஸ் பக்கத்திலும் கடந்த 2020 ஜூன் 10 அன்று, இதே புகைப்படம் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
“You can cut all the flowers but you cannot keep Spring from coming.”
A bird eye view of last year Birgade Rally at #Kolkata #LalSalaamComrade pic.twitter.com/EmuvpqaiXI
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) June 10, 2020
மஞ்சள் நிற ஆடை அணிந்து பேரணியாக மக்கள் செல்வது போன்று பரவும் மற்றொரு புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது எத்தியோப்பியாவில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
Mdgfund என்ற இணையதளத்தில் “2015 ஆம் ஆண்டிற்குள் நாம் வறுமையை ஒழிக்க முடியும்” என்ற முழக்கத்தின் கீழ் எத்தியோப்பியன் ஓட்டத்தை ஹெய்ல் கெப்ரெஸ்லாஸி துவக்கினார்” என்ற தலைப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
இதே போன்று CNN Travel என்ற இணையதளத்திலும் இதே புகைப்படம் எத்தியோப்பியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி மூலம் டெல்லியில் கூடிய கூட்டங்கள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் இரண்டு புகைப்படங்கள், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிகிறது.