மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு இனி உணவுப் பொருட்களை எடுத்து செல்லலாம்..!
பரவிய செய்தி
மால் மற்றும் மல்டிப்ளெக்ஸ் போன்றவற்றில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் MRP விலையில் விற்க வேண்டும். மேலும், மக்களும் உணவுப் பொருட்களை திரையங்கிற்குள் எடுத்து செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மால் மற்றும் மல்டிப்ளெக்ஸில் உள்ள தியேட்டர் மற்றும் ஃபுட் கேன்டீன்களில் அதிக விலையில் எதையும் விற்க முடியாது.
மதிப்பீடு
சுருக்கம்
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் உணவுப் பொருட்கள் MRP விலையில் விற்க வேண்டும், உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் என்ற அறிவிப்பு தமிழகத்தில் இன்னும் செயல்படுத்தவில்லை.
விளக்கம்
மெட்ரோ சிட்டிகள் எனும் மக்கள் அதிகம் வசிக்கும் நகரப்பகுதியில் ஷாப்பிங் மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்உள்ளிட்டவை முதன்மையாகி விட்டன. திரைப்படங்கள் பார்க்க மற்றும் பொழுதுபோக்கிற்காக சுற்றிப்பார்க்க என இன்றைய தலைமுறையினர் மால்கள், மல்டிப்ளெக்ஸ் இடங்களுக்கு செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் இவ்விடங்களில் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை. உயர்ரக இடங்களுக்கு செல்லும் மக்கள் அங்கு விற்பனை செய்யும் உணவுகளையும், ஜூஸ், குடிநீர் உள்ளிட்டவைகளை அதிக விலை கொடுத்தே வாங்கி செல்கின்றனர். சந்தை விலையை விட இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களானது MRP விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்ற புகார்கள் அடிக்கடி எழுவதுண்டு.
ஒரு பாப்கார்ன் விலை ரூ.250 , தண்ணீர் பாட்டில் ரூ.50 என அதிக விலைக்கே விற்கப்படுகிறது. சில மக்களும் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பாமல் வாங்கி செல்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள் திரைப்பட இடைவெளியில் ஏதேனும் உண்ண எண்ணுவர். ஆனால், மால்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் அங்கு விற்பனை செய்யும் பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு கட்டாயப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லை. ஆகையால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
இதையடுத்து, State legal metrology department controller அகுன் சபர்வால் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் இனி திரையரங்கில் pack செய்யப்படாத பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை எடைக்கு ஏற்றவாறே விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இது தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இனி மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் போன்றவற்றில் உள்ள திரையரங்கு மற்றும் ஃபுட் கோர்டில் MRP விலையிலேயே Pack செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். மேலும், மக்களும் திரையரங்கிற்கு வெளியே வாங்கிய உணவுகளையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். ஒருவேளை நிர்வாகம் சட்டத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் மக்கள் புகார் அளிக்கலாம்.
” இந்த சட்டம் தொடர்பாக தெலுங்கானா மாநிலம் அங்குள்ள மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உள்ளிட்டவைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள மால்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்கிற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடைமுறைக்கு வர உள்ளது “.
தமிழகத்தை பொறுத்தவரை சென்ற வருடம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் திரையரங்குகளில் எம்.ஆர்.பி. விலையில் உணவு பொருட்களை விற்க வேண்டும், அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும், தண்ணீர் பாட்டிலுடன் தியேட்டர் வருவோர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அவர்களும் எம்.ஆர்.பி. விலையில் விற்பதாக கூறி இருந்தார்.
தற்போது மஹாராஷ்டிராவில் கொண்டு வர முடிவு செய்த பிறகு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், திரையரங்குகளின் தரத்தை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்ய முடியும் சிறிய ஊர்களில் பொருட்களின் விலையுடன் பெரிய ஊர் பொருட்களின் விலை வேறுபடும் . தண்ணீர் பாட்டில் விலை வெளியில் 15 ரூபாய் 5 ஸ்டார் ஹோட்டலில் 120 ரூபாய் அதை யாரும் கேள்வி கேட்கவில்லை உணவு பொருட்களின் விலையை குறைக்க இயலாது எனவும் வெளியிலிருந்து உணவு பொருட்களை அனுமதிக்க இயலாது எனவும் தெரிவித்தார்.
மாநில அரசுகளே மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் நடைபெறும் இவ்வாறான செயல்களை கண்டித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சார்பாக இந்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகையால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இந்த கட்டுப்பாடுகள் நடக்க வாய்ப்பில்லை.