‘இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ்’ என தவறான செய்திகளைப் பரப்பும் பிரதமர் மோடி!
பரவிய செய்தி
இஸ்லாமியர்களுக்கு விதிமீறி இடஒதுக்கீடு.. இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கியது காங்கிரஸ்; கர்நாடகாவில் செய்ததை நாடு முழுவதும் செய்ய துடிக்கிறது – மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நேற்று (ஏப்ரல் 26) மக்களவைத் தேர்தல் முடிவடைந்தநிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கிய காங்கிரஸ், இப்பொது இதை நாடு முழுவதும் செய்ய துடிக்கிறது என்று குறிப்பிட்டு குற்றச்சாட்டியுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#WATCH | Madhya Pradesh | Addressing a public meeting in Sagar, Prime Minister Narendra Modi says, “Congress is the biggest enemy of OBC section who has taken away the rights of OBC. Congress has killed social justice, hurt the sentiment of the Constitution and humiliated… pic.twitter.com/Wp7HVXIrgK
— ANI (@ANI) April 24, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 24 அன்று புகைப்படம் ஒன்றை குறிப்பிட்டு பதிலளித்திருந்ததைக் காண முடிந்தது.
அதில், “முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் கூறிய ஸ்ரீ ஹெச் டி தேவகவுடா, தனது தற்போதைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடியின் புதிய கூட்டாளியான தேவகவுடாவின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டு, ஒன்றிய அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
Prime Minister @narendramodi‘s claim that the Congress has transferred the reservation quota from backward classes and Dalits to Muslims is a blatant lie.
It stems from ignorance but also indicative of his desperation born from a fear of defeat. No leader in the history of our… pic.twitter.com/626QZpRVJ0
— Siddaramaiah (@siddaramaiah) April 24, 2024
எனவே முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடஒதுக்கீடு வழங்கியதற்கும், ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவிற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். இது குறித்து ஏப்ரல் 25 அன்று India Today “கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது தேவகவுடா அரசு” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், கர்நாடகாவில் வீரப்ப மொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசு,1994 இல், i) முஸ்லீம்கள், ii) பௌத்தர்கள் மற்றும் பட்டியலின பிரிவில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்கள் ஆகிய இரண்டு பிரிவினருக்கும், “மிகவும் பிற்படுத்தப்பட்டோர்” என்ற அடையாளத்துடன் 2பி பிரிவில் 6 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு உரிமை கோரியது.
அதன்படி முஸ்லீம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பௌத்தர்கள் மற்றும் எஸ்சி பிரிவினருக்கு இரண்டு சதவீதமும் இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அக்டோபர் 24, 1994 முதல் அமலுக்கு வருமாறும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக அரசு பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகள் உட்பட ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்நிலையில் வீரப்ப மொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசியல் நெருக்கடி காரணமாக இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு டிசம்பர் 11, 1994 அன்றே தனது ஆட்சியை கலைத்தது.
இதற்கிடையில் 1994, டிசம்பர் 11 அன்று ஹெச்.டி.தேவேகவுடா முதல்வராக பதவியேற்றார். 1995 பிப்ரவரி 14 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி முந்தைய அரசின் ஒதுக்கீட்டுத் தீர்ப்பை திருத்தங்களுடன் அமல்படுத்தினார். அதன்படி கர்நாடகாவில் ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க 2பி என்ற தனித்துவமான பிரிவு கொண்டுவரப்பட்டது. அதன்படி கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு வேலைகளில் நான்கு சதவீத இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த தேவகவுடா அரசின் மூலம் தான் 1995 இல் முஸ்லீம்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
மேலும் பின்னர் ஆட்சிக்கு வந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுடன் தான் சேர்க்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் இந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் போலியான தகவல்!
முடிவு:
நம் தேடலில், காங்கிரஸ் ஆட்சியில் தான் கார்நாடகாவில் முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ள தகவல்கள தவறானவை என்பதை அறிய முடிகிறது.