இந்திய பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டினார்களா ?
பரவிய செய்தி
பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய இஸ்லாமிய பெண்கள். தேச விரோதிகளுக்கு சரியான செருப்படி.
மதிப்பீடு
சுருக்கம்
பிரதமர் மோடி சிலையின் படத்தை வைத்து இஸ்லாமிய பெண்கள் அவருக்கு கோவில் கட்டியதாக கூறப்படும் பதிவு சமூக வலைதளங்களில் அதிக ஷேர்களை பெற்றுள்ளது.
விளக்கம்
உண்மை என்ன ?
அதிக ஷேர்களை பெற்ற அப்பதிவில் இரண்டு படங்கள் இணைக்கப்பட்டிருந்தது. அதில் முதல் படத்தை நாம் தேடி ஆராய்ந்து பார்க்கையில் , பிப்ரவரி 12, 2015 அன்று NDTV வலைதளத்தில் வெளியான கீழ்க்கண்ட செய்தி ஒன்றில் அந்த புகைப்படம் இருந்ததைக் கண்டறிய முடிந்தது. “அகமதாபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் மோடியின் அபிமானிகள் சுமார் 300 பேர் கொண்ட குழு 7 லட்சம் செலவில் கோவிலைக் கட்டினர்.” என்பது பற்றிய செய்தி அது.
மேலும் “பிரதமர் நரேந்திர மோடி தனக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில் குறித்து தனது அதிருப்தியை ட்வீட் செய்த சில மணிநேரங்களில், அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள அந்த கட்டிடம் அதிகாரிகளால் இடிக்கப்பட்டது”, என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே செய்தியில் பிரதமர் மோடியின் ட்வீட்டும் இடம்பெற்றுள்ளதையும் காணலாம். 2015ஆம் ஆண்டு மோடியின் 300 அபிமானிகள் கட்டிய கோவிலின் புகைப்படத்தைதான் இஸ்லாமிய பெண்கள் கட்டியதாக வைரலான செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
பதிவில் இருந்த இரண்டாவது படத்தை நாங்கள் தேடி ஆராய்ந்தபோது , “முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்” என்ற தலைப்பில் ஜூலை 31, 2019 தேதி தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் அப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து இஸ்லாமிய பெண்கள் மோடிக்கு கோவில் கட்டினரா என தேடிப்பார்க்கையில், “பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டுகிறார்கள்.”, என்ற தலைப்பில் அக்டோபர் 11, 2019 தேதி வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை காண முடிகிறது. அந்த செய்தியில், “முத்தலாக்கை ஒழித்து இஸ்லாமிய பெண்களான எங்களுக்கு மிகப்பெரும் நன்மையை செய்துள்ளார் பிரதமர் மோடி. அதனால் அவருக்கு நாங்கள் எங்கள் சொந்த செலவில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்நகர் மாவட்டத்தில் கோவில் ஒன்று அமைக்கப்போகிறோம் ” என ரூபி கசினி என்ற இஸ்லாமியப் பெண் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்தக்கோவில் கட்டப்பட்டதாக எந்தத்தகவலும் இல்லை.
முடிவு
பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய இஸ்லாமிய பெண்கள் என பரப்பப்படும் புகைப்படம் குஜராத்தில் மோடியின் 300 அபிமானிகளால் கட்டப்பட்டதாக செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. இரண்டாவது படமும் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
இதில் இருந்து பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்டினர் என பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது. அவருக்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் கோவில் கட்ட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது, இருப்பினும் அதன் பிறகு அந்தக்கோவில் கட்டப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.
ஆதாரம்
https://www.ndtv.com/india-news/after-pm-modi-tweets-hes-appalled-temple-for-him-pulled-down-739128
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/muslim-women-thank-pm-modi-on-passage-of-triple-talaq-bill/articleshow/70465902.cms
https://www.newindianexpress.com/nation/2019/oct/11/muslim-women-in-uttar-pradesh-building-temple-for-pm-modi-2045997.html