This article is from Mar 28, 2020

முஸ்லீம்கள் எச்சில் மூலம் கொரோனாவை பரப்புவதாக பரவும் தவறான வீடியோ!

பரவிய செய்தி

என் முகநூல் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? எச்சில் மூலம் எதை பரப்புகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்றின் அச்சம் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தட்டுகள், ஸ்பூன்களில் எச்சில் செய்து கொரோனா வைரசை பரப்புவதாக கீழ்காணும் வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தியில், ”  பீகாரில் மசூதிக்குள் ஒளிந்திருந்த 14 சீன முஸ்லீம்களை பீகார் போலீஸ் கொரானா பரிசோதனைக்கு அழைத்து சென்றது. ஈரோட்டில் தாய்லாந்து முஸ்லீம் முல்லாக்களை கொரானாவோடு போலீஸ் பிடித்தது. இன்று சேலம் மசூதியில் இந்தோனேசிய முல்லாக்கள் 11பேர். கீழே உள்ள வீடியோவை பார்க்கும் போது இவர்கள் எச்சில் செய்து வைப்பது கொரோனா பரப்பதற்கு வந்த மாதிரி இருக்கு. என்ன நடக்குது நாட்டில் ? ” என அதே வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் மதம் சார்ந்த தகவல்கள் மேன்மேலும் பதற்றத்தை உருவாக்கக்கூடும். வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

மேற்காணும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மையை இரு பகுதியாக காணலாம். முதலில் வைரல் செய்யப்படும் வீடியோ குறித்தும், அடுத்ததாக பீகார் மசூதியில் பிடிக்கப்பட்ட அயல்நாட்டு முஸ்லீம்கள் குறித்து பார்ப்போம்.

வைரல் வீடியோ :

வீடியோவின் ஆரம்பத்தில் ஸ்பூன்களை நாக்கினால் எச்சில் செய்யும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.பிறகு தட்டில், ஸ்பூன் போன்றவற்றில் இருப்பதை தடவி உண்பது போன்று செய்கிறார்கள்.

வீடியோ குறித்து தேடுகையில், 2019-ல் முஸ்லீம்கள் என்று ஓர் வீடியோவும், 2018-ல் வெளியான மற்றொரு வீடியோவும் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் வீடியோவானது சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.

2018-ல் வெளியான வீடியோவின் தலைப்பில், போஹராஸ் மக்களின் கேளிக்கையான நடவடிக்கை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தாவூதி போஹராஸ் சமூதாய மக்கள் ” உணவை வீணாக்கக்கூடாது ” என்ற கொள்கையை கடைபிடிப்பவர்கள். தங்கள் உணவில் எஞ்சி இருக்கும் அனைத்தையும் வீணாக்காமல் உண்பவர்கள்.

போஹராஸ் மக்கள் உண்ணும் முறை குறித்து தேடிய பொழுது, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் அவுட்லுக் தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் இருப்பவர்களின் தலையில் இருக்கும் குல்லாவும், வைரலாகும் வீடியோவில் இருப்பவர்கள் அணிந்து இருக்கும் குல்லாவும் ஒன்றாக இருக்கிறது.

2018-ல் வெளியான போஹராஸ் மக்கள் உணவு உண்ணும் வீடியோவை சமீபத்தில் கொரோனா வைரசை பரப்ப தட்டுகள், ஸ்பூன் போன்றவற்றை எச்சில் செய்வதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

அயல்நாட்டு முஸ்லீம்கள் கைதா :

மார்ச் 23-ம் தேதி நியூஸ்18 இந்தி செய்தியில், பீகார் மாநிலத்தின் பாட்னா அருகே உள்ள குர்ஜி பகுதியில் வழிபாட்டு தலத்தில் 12 அயல்நாட்டு முஸ்லீம்கள் மறைந்து இருப்பதாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலால் போலீசார் அவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அவர்கள் துர்கிஸ்தானில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜனவரி மாதத்தில் இருந்து பாட்னா பகுதியில் உள்ளார்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவை இருப்பதாகவும், தற்போது உள்ள சூழலில் அவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிப்பதாக ” கூறப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கொல்லம்பாளையம் பகுதியில் தங்கிருந்த தாய்லாந்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இருந்த பகுதியை சுற்றி இருக்கும் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்த இஸ்லாமிய ஆன்மீக குழுவைச் சேர்ந்த 11 பேர் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேலம் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

செய்திகளில் வந்த தகவலையும், தவறான வீடியோவையும் ஒன்றிணைத்து கொரோனா வைரசை பரப்ப முஸ்லீம்கள் இந்தியா வந்துள்ளதாகவும், மர்மம் விலகுமா என்றெல்லம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தவறான தகவலைகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader