37,554 அரசு பள்ளிகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை எனப் பொய் சொல்லும் சீமான்!

பரவிய செய்தி

“என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” – சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

Youtube Link:

மதிப்பீடு

விளக்கம்

மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த ‘பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சிக்கு’ கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும்  கௌசிக் வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த சீமான், “என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ்த்த நினைப்பவர்கள் தான் அவமானப்படவேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும். கௌசிக் ஓமனில் படித்ததால் அவனுக்கு தமிழ் வரவில்லை. என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை. வீட்டில் நாங்கள் பேசியே அவர்களுக்கு தமிழ் கற்றுத் தருகிறோம்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் சீமானின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

மேடைக்கு மேடை தமிழ், தமிழர் என்று தமிழ் தேசிய அரசியல் பேசி வரும் சீமான், “என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” என்று கூறியிருப்பது அரசியல் விமர்சகர்கள் இடையே பலத்த எதிர்ப்பையும், பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

2022 தரவுகளின் படி, அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 37,579 அரசு பள்ளிகள் இருக்கின்றன என்பதை தினமணி வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. இந்த அனைத்து பள்ளிகளிலும் தமிழும் ஒரு கட்டாயப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அரசு பள்ளிகளில் மட்டும் 52,75,203 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இது தவிர 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக உள்ளது. மேலும் 37,579 அரசு பள்ளிகள் மற்றும் 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வியும் (Tamil Medium), ஆங்கிலவழிக்கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2024 தரவுகளின் தமிழ்நாட்டில் மொத்தம் 37,554 அரசுபள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்து பார்த்ததில், 2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழ்வழியில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 5,05,248 மாணவர்களுக்கும், 4,72,617 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், 4,34,888 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசின் அறிவிப்பிலிருந்து அறிய முடிகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சுமார் 5 இலட்சம் மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி கற்று 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

மேலும் தமிழ்நாட்டில் இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் , நான் முதல்வன் போன்ற பல திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர தமிழ்நாட்டில், மாணவர்களுக்கு பாடத்திட்டம் தவிர்த்து முழு கல்வியை வழங்கும் நோக்கில் 26 தகைசால் பள்ளிகளும், 15 மாதிரிப்பள்ளிகளும் கடந்த 2022 லிருந்து செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ‘எல்லோரும் மருத்துவரானால் எப்படி.. தற்சார்பு விவசாயத்திற்கு வாருங்கள்’ என்று படிக்கும் இளைஞர்களை திசை திருப்பும் சீமான் !

இந்நிலையில், தமிழ்நாட்டில் 52,75,203 மாணவர்களுக்கு, 37,579 அரசு பள்ளிகள் மூலம் தமிழ் கட்டாயப்பாடமாக கற்பிக்கப்பட்டுவரும் நிலையில், “என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” என்று சீமான் கூறியிருப்பது, அவரின் மகன்கள் ஆங்கில வழிப்பள்ளிக்கூடத்தில் படிப்பதை நியாயப்படுத்தக் கூறப்படும் பொய்.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader