மோடியை விமர்சனம் செய்ததற்காக மணிப்பூரை சேர்ந்த சிறுமி கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மர் வீடியோ !
பரவிய செய்தி
மோடியை விமர்சனம் செய்ததற்காக மணிப்பூரை சேர்ந்த சிறுமியை பலி வாங்கிய சங்கிகள்!!
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விமர்சனம் செய்த 12 வயது சிறுமி கொல்லப்பட்டதாகக் கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஒரு சிறுமி “அன்பிற்குரிய திரு. மோடி, மணிப்பூர் எரிகிறது, இதுவரை 100+ இறப்புகள் ஏற்பட்டுள்ளன, 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின, 75,000+ மக்கள் வீடுகளை இழந்தனர், 40+ நாட்கள் இணையசேவை இல்லை, நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று எழுதப்பட்டுள்ள பதாகையை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் இந்த சிறுமிக்கு பின்புறம் காட்டப்படும் வீடியோவில், சிறுமி ஒருவர் மிகவும் காட்டிமிராண்டித் தனமாக துப்பாக்கியால் சுடப்படுவதையும் பார்க்க முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக பதாகை வைத்திருப்பது போன்ற புகைப்படம் கடந்த 2023 ஜுன் மாதம் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிகிறது.
Manipur can be won through love, not hatred.#ManipurBurnPMMum pic.twitter.com/fxmeHJb5NM
— Hyderabad Congress Sevadal (@SevadalHYD) June 17, 2023
புகைப்படத்தில் இருக்கும் சிறுமி குறித்து தேடியதில், அவருடைய பெயர் லிசிப்ரியா தேவி கங்குஜம் என்பதையும், இவர் மணிப்பூரைச் சேர்ந்த குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் (Child Environmentalist Activist) என்பதையும் அறிய முடிந்தது. இவர் தனது ஆறு வயதிலிருந்தே காலநிலை மாற்றத்தை எதிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடி வருகிறார்.
எனவே பரவி வரும் புகைப்படம் உண்மை தானா என்பது குறித்து அவருடைய ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். கடந்த 2023 ஜூன் 12 அன்று “அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே.. மணிப்பூர் வன்முறை குறித்து எவ்வளவு காலம் அமைதியாக இருக்கப் போகிறீர்கள்? மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு அந்தப் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் சிறுமி லிசிப்ரியா தேவி கங்குஜம் துப்பாக்கியால் சுடப்பட்டதாகப் பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், பரவி வரும் வீடியோ 2022 டிசம்பரின் போது மியான்மரில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் ஆய் மார் துன் (Aye mar Tun) என்பதையும் அறிய முடிந்தது. இந்த வீடியோ குறித்து இதற்கு முன்பே ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !
மியான்மரைச் சேர்ந்த ஆசிரியையான ஆய் மார் துன் (Aye mar Tun), மியான்மர் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, சிறுமி லிசிப்ரியா தேவி கங்குஜம் பிரதமரை விமர்சித்து மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக பதாகை பிடித்து வெளியிட்டிருந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
சிறுமி லிசிப்ரியா தேவி கங்குஜம் இன்று (மார்ச் 09) அருணாச்சலப்பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ளது குறித்த தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தின் மூலம், சிறுமி லிசிப்ரியா தேவி கங்குஜம் இறந்ததாகப் பரவி வரும் செய்திகளும் தவறானவையே என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், மோடியை விமர்சனம் செய்ததற்காக மணிப்பூரை சேர்ந்த சிறுமி கொல்லப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை உறுதி செய்ய முடிகிறது.