மைசூர் அருகே காவேரி ஆற்றில் கடல் கன்னியா ? உங்க வதந்திக்கு அளவே இல்லையா…!
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவிரி கரையோர பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் கடல் கன்னிகள் காணப்பட்டதாக 22 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
உலகம் முழுவதும் கடல் கன்னிகள் இருப்பதாக கூறிக் கொண்டு உலாவும் பல்வேறு வீடியோக்களின் உண்மைத்தன்மை அறியாமலேயே பகிர்வதால் அவை சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன.
தற்போது காவிரி ஆற்றில் கடல் கன்னி என வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃபிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், JJPD Production எனும் யூடியூப் சேனல் ஜூலை 17-ம் தேதி ” Terrifying Mermaid caught on video 2022 – Real or myth? ” என்ற தலைப்பில் வெளியிட்ட முழுமையான வீடியோ நமக்கு கிடைத்தது.
மேலும், வீடியோவின் நிலைத்தகவலில், ” இந்த வீடியோக்கள் எங்களால் உருவாக்கப்பட்டது. இதில் காட்டப்படும் படங்கள் அனைத்து கற்பனை. சிஜிஐ டிசைன் மற்றும் கடல் கன்னி 3டி-ல் உருவாக்கப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிக்கராகுவா எனும் நாட்டைச் சேர்ந்த JJPD Production யூடியூப் சேனலில் விசித்திரமான உயிரினங்களை சிஜிஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். அவற்றில், சமீபத்தில் வெளியிடப்பட்ட கடல் கன்னி வீடியோவை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், மைசூர் அருகே ஸ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றங்கரையில் பாலத்தின் அடியில் கடல் கன்னி காணப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானது. அது சிஜிஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வீடியோ என அறிய முடிகிறது.