நளினி சிதம்பரம் திமுகவின் நீட் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதாகப் பரவும் பழைய செய்தி !
பரவிய செய்தி
நீட் விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – நளினி சிதம்பரம்
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், திமுக அரசின் நீட் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தந்தி டிவி நியூஸ் கார்டு மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
திமுக கொண்டு வந்த நீட் விலக்கு சட்டம் தொடர்பாக நளினி சிதம்பரம் வழக்கு தொடர்வதாக சமீபத்தில் எந்த செய்திகளும் வெளியாகவில்லை. நளினி சிதம்பரம் நீட் தேர்விற்கு ஆதவரான நிலைப்பாட்டை கொண்டவர் என்பதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரையில் தெரிவித்து இருந்தோம்.
மேலும் படிக்க : நீட் தேர்விற்கு வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆதரவா ?
வைரல் செய்யப்படும் தந்தி டிவி செய்தியானது, 2017-ல் தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் பேசியது.
2017-ல் அதிமுக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றி செய்தியாளருக்கு நளினி சிதம்பரம் அளித்த பேட்டியில், ” தமிழக அரசின் நீட்டிற்கு எதிரான ஓராண்டு விலக்கு கொண்டு வந்த அவசர சட்டத்தை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வாங்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்வோம். இந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முதலில் இந்த சட்டம் கிராமப்புற மாணவர்களுக்கானது என்பது ஏமாற்று வேலை. இந்த சட்டம் தனியார் பள்ளியில் மாநிலக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்காக போடப்படுகிறது. 10 ஆண்டுகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்ட 30,000 மருத்துவ மாணவர்களில் 250 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். அவசர சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் ” என கூறி இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், நளினி சிதம்பரம் திமுக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்க உள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது. அது 2017-ல் வெளியான செய்தி என அறிய முடிகிறது.