This article is from May 18, 2018

நீட் தேர்வில் உள்ளாடையில் ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைஸா ?

பரவிய செய்தி

நீட் தேர்விற்கு பெண்கள் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்த ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைஸ். இப்போது சொல்லுங்கள் சோதனை தேவையா இல்லையா.!!

மதிப்பீடு

சுருக்கம்

2015-ல் நடைபெற்ற All India Pre Medical Test தேர்வின் போது உள்ளாடையில் ப்ளுடூத் டிவைஸ் மூலம் தேர்வு எழுதியதை ஹரியானா போலீஸ் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

விளக்கம்

2018 நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது மற்றும் தேர்விற்கு சென்ற பெண்களுக்கு கட்டுபாடுகள் எனக் கூறி நடந்த சோதனை அவலங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு உச்சக் கட்ட கோபத்தை உண்டாக்கியது. ஆனால், சோதனைகள் கடுமையாக இருந்ததால் தான் நீட் தேர்வில் நடைபெற இருந்த முறைகேடை கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பதிவிடப்பட்டது.

அதில்,  “ நேற்று நீட் தேர்வில் சோதனை பற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனையில் ஆந்திராவில் ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைஸ்! தூரத்தில் இருந்து எளிதில் தொடர்பு கொண்டு விடையைப் பெற்று எழுத முடிகிற எலக்ட்ரானிக் கருவியை பெண்கள் உள்ளாடையில் பொருத்தி வந்து உள்ளார்கள்.

அப்போ வசதி உள்ள பணக்காரன் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி திருட்டுத்தனம் செய்பவன் ஈசியாக ஜெயிப்பான் ஏழை மாணவனின் நிலை? இப்போ சொல்லுங்கள் இந்த சோதனை தேவையா இல்லையா?

பெண்களை பெண்களே சோதனை செய்வது தவறில்லை. ஆனால், பெண் மாணவர்களை சோதனை செய்வதை பத்திரிகைகள் படம் பிடித்து போடுவதும், படம் பிடிக்க அனுமதித்த கம்யூனிஸ்ட் அதிகாரிகள் செய்ததுதான் தவறு. முக்கியமான விஷயம் இந்த எலக்ட்ரானிக் டிவைசை மெட்டல் டிடெக்டர் காட்டிக்கொடுக்காது “ என பதிவிடப்பட்டு அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

ஆந்திராவில் நீட் தேர்வின் போது ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைஸ் பிடிபட்டதாக கூறிய செய்தியில் காண்பிக்கப்பட படங்கள் உண்மையானவையே. ஆனால், அவை நீட் தேர்வின் போது நிகழ்ந்தவை அல்ல. 2015-ல் நடைபெற்ற All India Pre Medical Test தேர்வின் போது உள்ளாடையில் ப்ளுடூத் டிவைஸ் மூலம் தேர்வு எழுதியதை ஹரியானா போலீஸ் கண்டறிந்துள்ளனர்.

இதில், ரோஹ்டக்கை சேர்ந்த எம்.பி.பி.எஸ் மாணவன் ரவி கேள்விக்கான விடையை வழங்க மாணவர்கள் சிம் கார்டு யுனிட்ஸ் மற்றும் ப்ளூடூத் பொருத்தப்பட்ட இயர்போன்ஸ் மூலம் கேட்டறிந்து தேர்வினை எழுதியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹரியானா போலீஸ், புபேந்தர் மற்றும் சஞ்சித் என்ற இரண்டு BDS மருத்துவர்கள், இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன் ரவி மற்றும் ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய அளவிலான மிகவும் கடுமையான போட்டி நிறைந்த All India Pre Medical Test தேர்வில் 90 விடைகள் வெளியாகியது எவ்வாறு என்றும், ரூ.15-20 லட்சம் செலவு செய்து தேர்வில் முறைகேடாக உதவி பெற்று மருத்துவராக முயன்றதாகக் கூறப்படும் 9 போட்டியாளர்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து பேசிய போலீசார், இந்த குழு மற்ற மாநிலங்களிலும் பரவி உள்ளதாகவும், குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதாகக் கூறினர்.

bluetooth vest

இதற்காகவே புதுவிதமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை டெல்லியில் இருந்த கடை ஒன்றில் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீஸ் விசாரணையில் ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைஸ் பொருத்தி வடிவமைக்கப்பட்ட 700 உள்ளாடைகள் பீகார் மாநிலத்திற்கு மட்டும் டெல்லி கடையில் இருந்து பெறப்பட்டதாக தெரியவந்தது.

AIPMT தேர்வுக்கும் NEET தேர்வுக்கும் என்ன வித்தியாசம்? AIPMT – All India Pre-Medical test/ Pre-Dental Entrance Test NEET – National Eligibility cum Entrance Test இரண்டுக்கும் கிட்டத்தட்ட பாடத்திட்டமுறை அனைத்தும் ஒன்று தான். நீட் தேர்வுக்கு முன் நடத்தப்பட்ட நுழைவு தேர்வு AIPMT. CBSE-ஆல் 15% அகில இந்திய கோட்டாவில் மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தேர்வு. NEET என்பது 15% அகில இந்திய கோட்டாவுடன் 85% மாநில கோட்டாவுக்கும் சேர்த்து நடத்தப்படுவது.

ஹைடெக் கம்யூனிகேஷன் டிவைசை நீட் தேர்வில் பயன்படுத்தியதாகக் கூறியது, ஆந்திராவில் பிடிபட்ட பெண் மற்றும் தற்போது நிகழந்த நீட் தேர்வு எனக் கூறிய அனைத்தும் தவறான தகவல்கள். 2015-ல் All India Pre Medical Test தேர்வில் நிகழ்ந்த முறைகேடை நீட் தேர்வில் நிகழ்ந்ததாகக் கூறுவதும், நீட் தேர்வில் பெண்கள் உள்ளாடையில் மறைத்து வைத்து கொண்டு வந்ததாகக் கூறுவதும் பொருந்தாத ஒன்று. ஹைடெக் டிவைஸ் பயன்படுத்துவதாகக் கூறுபவர்கள் அதற்கு துணையாக இருப்பது மருத்துவர்களே என்பதை அறியவில்லையா!! இப்படி பொருந்தாத நிகழ்வை தொடர்புபடுத்தி வீண் வதந்தியை பரப்புவது கண்டிக்கத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader